/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பசுமை பணியில் கலாம் அறக்கட்டளை
/
பசுமை பணியில் கலாம் அறக்கட்டளை
ADDED : ஜன 26, 2026 05:25 AM

திண்டுக்கல்லில் நீர்நிலை பாதுகாப்பு, நிலத்தடி நீர்மட்ட உயர்வு, கார்பன் சமநிலை, சுத்தமான காற்றை உருவாக்கும் விதமாக பசுமை தமிழகம், பசுமை இயக்கங்கள் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன்படி தேர்தெடுக்கப்பட்ட குளக்கரைகள், உள்ளாட்சி அமைப்புகளின் ரோட்டின் ஓரங்களில் தன்னார்வலர்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக தன்னார்வலர்கள் அமைப்புகள் சார்பிலும், பசுமை போர்வைக்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
அதன்படி பித்தளைப்பட்டி குளக்கரை, நீர் வழித்தடங்களில் ஏ.பி.ஜெ.,அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள், பனை விதைகள் நட்டு மாற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நீர்வளம், நீர்நிலை கரை பலம் பெறவும் பனை விதைகள் துாவப்பட்டன. இதில் என்.எஸ்.எஸ்., திட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர்.
மேலும், பலன் தரும் மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் நடப்பட்டன.
விருதுகள் வழங்கி பாராட்டு பசுமைப் பணிகள் குறித்து ஏ.பி.ஜெ., அப்துல் கலாம் சமூக நல அறக் கட்டளை திட்ட மேலாளர் இன்னாசிராஜா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பசுமை வளர்க்க பல இடங்களில், மரக்கன்றுகள், பனை விதைகள், மூலிகை செடிகள் நடுவது, மண்ணை மாசுபடுத்தாமல் இருக்க மீண்டும் 'மஞ்சப்பை நாடு மனிதா..' என விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.
விவசா யம் நாட்டின் மிகப்பெரிய முதுகெலும்பு. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள், மண்வெட்டி, களைக்கொத்து, கதிர் அரிவாள், காரசட்டி இயற்கை உரம், பழ மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் வழங்கி வருகிறோம்.
சிறப்பாக விவசாயம் செய்யும் இன்றைய இளைஞர்கள், விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கும் விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறோம்.
முக்கியமாக அரசு பள்ளிகள், கல்லுாரிகள், தொழில் பயிற்சி நிலையம், பல்கலைகள், அங்கன்வாடிகள், பொது இடங்களில், மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள், பனை விதைகள் நடப்படுகின்றன., என்றார்.
மக்கள் பங்களிப்பு அவசியம் களப்பணியாளர் மருதைகலாம்: பசுமையை நோக்கிய முயற்சிகள் முன்பை விட தற்போது அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காடுகள், மரங்கள் அழிக்கப்படுவது புவி வெப்பமயமாதல் போன்ற உலகளாவிய பிரச்னைக்கு காரணமாகிறது.
இது போன்ற பெரிய விஷயங்கள் நடப்பதற்கு முன்பே பல்லுயிர் பெருக்கம் தற்சார்பு வாழ்க்கை, நுண்ணுயிரினங்கள், பறவைகளின் வாழ்விடங்கள், விலங்குகளில் வழித்தடம், வாழ்வாதாரம் என பல கோணங்கள் அடைப்படையிலான சின்ன, சின்ன விஷயங்கள் தடம் தெரியாமல் அழிக்கப்படுவதை கவனிக்க தவறுகிறார்கள். சமூகத்தின் அமைதி, ஆற்றல் வெளிப்பாடு இரண்டுக்கும் சுற்றுப்புறச்சூழல் அவசியம்.
அனு ஆற்றலை விடவும் அளவிட முடியாத அளவிற்கு பெரியது இயற்கை. அதை உணர்ந்துதான், சூரிய ஒளி, நீரிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் எடுக்கப்படுகின்றன.
எதிர்காலத்திலும் இதன் தேவையே அதிகம் இருக்கும். அதற்கேற்றவாறு, இந்த உலகத்தை பசுமையாகவும், செழுமையாகவும் மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது. அதன் சின்ன பங்களிப்பாக மரக்கன்று நடுதல், பனை விதை துாவி வருகிறோம். பொது மக்களும் அவரவர் சக்திகேற்ற வகையில் பங்களிப்பு செய்யவேண்டும்., என்றார்.

