ADDED : மார் 19, 2026 05:04 AM

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு மக்களின் நலன் வேண்டி மகா பிரத்தியங்கிரா தேவி யாக பூஜையை சபை நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் மூடையாக கொட்ட வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதிஅதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டினர். நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்க அமாவாசை கோபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி மாத அமாவாசை யொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
