/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராட்சி, பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணியில் நீடிக்கும்... அலட்சியம் ; தொற்று பரப்பும் மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
/
ஊராட்சி, பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணியில் நீடிக்கும்... அலட்சியம் ; தொற்று பரப்பும் மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
ஊராட்சி, பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணியில் நீடிக்கும்... அலட்சியம் ; தொற்று பரப்பும் மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
ஊராட்சி, பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணியில் நீடிக்கும்... அலட்சியம் ; தொற்று பரப்பும் மையங்களாக மாறும் குப்பை கிடங்குகள்
ADDED : அக் 02, 2025 03:24 AM

ரெட்டியார்சத்திரம் : உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால், பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட குப்பை கிடங்குகள், தெருக்கள் தோறும் அமைத்த குப்பைத் தொட்டிகள் நோய் பரப்பும் மையங்களாக மாறி வருகின்றன.
மக்களின் அடிப்படை தேவைகளாக, குடிநீர், கழிவறை, கழிவுநீர் கால்வாய், சுகாதாரமான சூழல் போன்றவை உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் கழிவுகளை தெருக்களில் வீசுவதால், சுகாதாரம் சார்ந்த பல பிரச்னைகள் உருவாகிறது. இதில் பாதிப்பை தவிர்க்க, திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நடைமுறை சிக்கல்களை காரணம் கூறி, இதனை முறையாக செயல்படுத்துவதில், அலட்சியம் நீடிக்கிறது. ஆரம்ப காலத்தில் மக்கும், மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வலியுறுத்தப்பட்டது. இதற்காக, உர தயாரிப்பிற்கு பயன்படுத்த ஏதுவாக இத்திட்டத்தில் பல லட்சம் ரூபாயில் இரும்பு குப்பைத்தொட்டிகள் விலைக்கு வாங்கப்பட்டன. அடுத்த சில நாட்களிலேயே இவற்றின் பயன்பாடு முடங்க துவங்கின. தற்போது பல உள்ளாட்சி அமைப்புகளில் இத்தொட்டிகள் பயன்பாடின்றி, குப்பையோடு குப்பையாக மட்க துவங்கியுள்ளன.
தூய்மை காவலர்கள், கழிவுகளை சேகரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். பல இடங்களில் கழிவு அகற்றப்படாமல், குப்பை கழிவுகளில் மூழ்கி கிடக்கின்றன. சிலர், குப்பைத் தொட்டியிலேயே கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட குப்பை தரம் பிரித்தல், மண்புழு உர உற்பத்தி கிடங்குகள் பாழடைந்துள்ளன.
மழைக்காலம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும், சுகாதாரம் காக்கவேண்டிய திறந்த வெளி குப்பை தொட்டிகள், தரம் பிரித்தல் தொட்டிகள், தற்போது தொற்று நோய் பரப்பும் மையங்களாக மாறி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் விதத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். .
* கூடுதல் கண்காணிப்பு தேவை
க.உமாமகேஸ்வரி, மாவட்ட துணை தலைவர், பா.ஜ.,: திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் கூட பல இடங்களில் செயல்பாட்டில் இல்லை. பணியாளர் பற்றாக்குறை, குப்பை சேகரிப்பு வண்டி பழுது என, ஏதேனும் காரணத்தைக் கூறி தவிர்க்கின்றனர். கண்ட கண்ட இடங்களில் வணிக நிறுவன, குடியிருப்பு, பாலிதீன், மருத்துவ கழிவுகள் குவிக்கப்படுகின்றன. நீரோடை, கண்மாய்கள் உள்ளிட்ட நீராதார வழித்தடங்களிலும் பாலித்தின் கழிவுகளை குவித்து, மழைநீர் கடந்து செல்வதை தடை படுத்துகின்றனர். தூய்மை காவலர்களே இவற்றை எரியூட்டுவதால், சுற்றுச்சூழலை மாசுபடுகிறது. மழை நீர் தேங்குவதால் பல குப்பை கிடங்குகள், இரும்பு தொட்டிகள், கொசு உற்பத்தி மையங்களாக மாறி தொற்று நோயைப் பரப்பி வருகின்றன. புகைமண்டலம், தொற்றுக் கிருமி அதிகரிப்பு பிரச்னைகள் அப்பாவி குடியிருப்பு வாசிகளை வீடு தேடி வந்து நோயாளிகளாக மாற்றும் அவலநிலை நீடிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்தி கண்காணிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-