/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆள் இல்லாமல் காவல் உதவி மையங்கள்... காத்து வாங்குது :போலீசார் அலட்சியப்போக்கால் அதிருப்தி
/
ஆள் இல்லாமல் காவல் உதவி மையங்கள்... காத்து வாங்குது :போலீசார் அலட்சியப்போக்கால் அதிருப்தி
ஆள் இல்லாமல் காவல் உதவி மையங்கள்... காத்து வாங்குது :போலீசார் அலட்சியப்போக்கால் அதிருப்தி
ஆள் இல்லாமல் காவல் உதவி மையங்கள்... காத்து வாங்குது :போலீசார் அலட்சியப்போக்கால் அதிருப்தி
UPDATED : டிச 20, 2025 05:56 AM
ADDED : டிச 20, 2025 05:55 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் உதவி மையங்களில் போலீசார் இருப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இவர்களின் அலட்சியப்போக்கால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாவட்டத்தை பொறுத்தவரையில் நிலுவை வழக்குகள், குற்ற வழக்குகள், போக்சோ போன்றவற்றில் மாவட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டு குற்றவாளிகளை கண்டறிகின்றனர். ஆனால் திருட்டு, அலைபேசி, நகை பறிப்பு, வழிப்பறி போன்றவை நாளுக்கு நாள் அதிகமாகின்றன. இதற்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவல் உதவி மையங்களில் போலீசார் இல்லாததும் ஒரு காரணம் . இந்த மையங்களில் ஆட்கள் இருந்தால் குற்றவாளிகளை விரைவாக பிடிக்கவும் முடியும், குற்றத்தில் ஈடுபட முயற்சிப்போரும் அஞ்சுவர். அதே நேரத்தில் எதிர்பாராத விபத்துக்கள், பிரச்னைகள், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை முன்னரே போலீசார் தடுக்க வாய்ப்பு உண்டு.
மாவட்டத்தில் 35 க்கு மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஸ்டேஷனுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காவல் உதவி மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கிறது . பெரும்பாலான மையங்களில் போலீசார் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் சிறு விஷயத்திற்கு கூட ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. போலீசார் இல்லாதால் இரவு நேரங்களில் மட்டுமில்லாமல் பகலிலே திருட்டு, வழிப்பறிகள் போன்றவை நடக்கின்றன .இதுமட்டுமில்லாமல் நகர்பகுதிக்கு வெளியில் உள்ள மக்கள் போலீசாரை எளிதில் அணுக முடியவில்லை. நெடுஞ்சாலை , வெளியூர் செல்லும் சாலைகளில் உள்ள மையங்களில் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் இல்லாததால் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மணல் திருட்டு, வாகன திருட்டு போன்ற வாகனங்கள் எளிதாக தப்பி செல்கின்றன. குறிப்பாக பழநிக்கு ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும், பாதையாத்திரையாக தமிழகம் முழுவதும் இருந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுபோன்ற மையங்களில் ஆட்கள் இல்லாமல் இருப்பது பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக மாறி வருகிறது.
எந்த மையங்களும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அப்படியே விட்டுள்ளனர். இதனால் அரசு பணமும் வீணாகிறது.போலீசார் பற்றாக்குறை ஒரு காரணமாக கூறப்பட்டாலும் பொதுமக்களின் நலன் கருதி மையத்திற்கு ஒருவராவது இருக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
.........
போலீசார் இருப்பது அவசியம்
தற்போது பழநி சீசன் காலம் என்பதால் திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து நுழைவுப்பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை இருக்கிறது. ஒரு சின்ன விபத்து என்றால் கூட அவர்கள் தவிக்கும் நிலை உருவாகிவிடும். அதோடு நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. வழிப்பறி, செயின் பறிப்பு, குற்ற சம்பவங்கள் போன்றவற்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. போலீசார் இருப்பை உறுதி செய்தாலே குற்றம் செய்ய வேண்டுமென நினைப்போருக்கு அச்சம் ஏற்படும். அவசர உதவிக்கு பொதுமக்கள் போலீசாரை அணுக இது போன்ற காவல் உதவி மையங்களில் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பது அவசியம். தற்போது பீட் போலீசார் கூட ரோந்து வருவதில்லை. குற்றவாளிகள் துணிவுடன் நடமாடுகின்றனர். உரிய நடவடிக்கை மாவட்ட போலீசார் முன்வர வேண்டும்
- கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், தொகுதி அமைப்பாளர், பா.ஜ., பழநி.

