/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடுக்கலாமே :நீர் நிலைகளில் ஆபத்து குளியல் அதிகரிப்பு:தேவையாகிறது அதிகாரிகள் விழிப்புணர்வு
/
தடுக்கலாமே :நீர் நிலைகளில் ஆபத்து குளியல் அதிகரிப்பு:தேவையாகிறது அதிகாரிகள் விழிப்புணர்வு
தடுக்கலாமே :நீர் நிலைகளில் ஆபத்து குளியல் அதிகரிப்பு:தேவையாகிறது அதிகாரிகள் விழிப்புணர்வு
தடுக்கலாமே :நீர் நிலைகளில் ஆபத்து குளியல் அதிகரிப்பு:தேவையாகிறது அதிகாரிகள் விழிப்புணர்வு
ADDED : அக் 25, 2025 04:47 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நிரம்பிய ஆறுகள், குளங்கள், கண்மாய்களில் பள்ளி கல்லுாரி மாணவர்கள், மக்கள் அதிகளவில் குளிக்கின்றனர். சிலர் நீரில் மூழ்கி பலியாகும் நிலையும் தொடர்கிறது. இதைத்தடுக்க அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மழை நீரை சேமிக்க ஊருக்கு ஊர் ஊரூணி, கண்மாய்களை ஏற்படுத்தி விவசாயம் கால்நடைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் விவசாயம் குறைந்ததால் ஊரூணி, கண்மாய்களை துார்வாராமல் கிடப்பில் போட்டனர். தற்போது சில நாட்களாக தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது.இங்கு பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் ஆர்வத்தில் குளிக்கின்றனர். இவர்கள் சில நேரங்களில் நீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்களும் நடக்கின்றன.
ஆறு,ஊரூணி, கண்மாய்கள் வறண்டு காணப்பட்ட போது மணல்கள் திருடப்பட்டு ஆங்காங்கு பள்ளங்களை ஏற்படுத்தி உள்ளனர்.இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் உயிர் பலி போன்ற விபத்துக்களை தடுக்கலாம். பெற்றோர்களும் விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை நீர் நிலைகள் பக்கம் செல்லக் கூடாது என எச்சரித்து கண்காணிக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க ஊரூணிக்கு வரும் மழை நீரில் சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் குழந்தைகளை தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குளிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த தண்ணீரை
குடிப்பதற்கும் சில கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார பிரச்னை ஏற்படுவதால் விழிப்புணர்வு அவசியமாகிறது. இதுபோன்ற நீர்நிலைகளில் குளித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
..........
அனுமதி இன்றி குளியல்
பருவமழை, புயலால் ஏற்பட்டுள்ள மழையால் ஆறுகள், குளங்கள், குட்டைகள் என பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி காணப்படுகிறது. சிறுவர்கள் உற்சாக மிகுதியால் இது போன்ற நீர் நிலைகளில் பெற்றோர்களின் அனுமதி இன்றி நண்பர்களுடன் குளிக்கின்றனர். இதில் நீச்சல் தெரியாமலும் ஆர்வ மிகுதியாலும் குளிக்கும் சிறுவர்கள் பலர் விபத்தில் சிக்க உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 2024ல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் கண்மாயில் குளித்த மூன்று சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீர் நிலைகளில் குளிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகளும் நீர்நிலைகளில் விழிப்புணர்வு பதாகைகளை அமைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும்.
எஸ்.எஸ்.சரவணச்செல்வம், மாநிலத் தலைவர், தமிழ் வேள் முன்னேற்ற கழகம்,நத்தம்.

