ADDED : மார் 19, 2026 05:00 AM
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மின்கம்பங்கள் முறிந்தன. தனியார் கட்டட கூரை 100 மீட்டர் துாரம் பறந்து விழுந்தது.
வத்தலக்குண்டு பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கோம்பைப்பட்டி, மல்லணம்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, கீழகோவில்பட்டி, வத்தலக்குண்டு பகுதிகளில் மின்கம்பங்கள், வாழை மரங்கள் சாய்ந்தன.
தனியார் கட்டடத்தில் இருந்த கூரை காற்றுக்கு துாக்கி வீசப்பட்டு 100 மீட்டருக்கு அப்பால் சென்று விழுந்தது. மதுரை ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் பலி இல்லை. மின்வாரியத்தினர் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு வாரங்களாக கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரை மணி நேர கன மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் : நேற்று மதியம் 1:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. 15 நிமிடம் பெய்த மழையால் நகரில் சுட்டெரித்த வெப்பம் ஓரளவு தணிந்தது.
கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடியில் நேற்று மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. தாண்டிக்குடி கீழ்மலைப் பகுதியில் காபி, ஏலக்காய் ,மேல் மலையில் காய்கறி சாகுபடிகளுக்கு ஏற்ற மழையாக அமைந்தது.
தற்போதைய மழையால் புழுக்கம் அடைந்த மலைப்பகுதி குளிர்ந்துள்ளது. வறண்ட வானிலையால் புல் உள்ளிட்ட தாவரங்கள் கருகி தீ அபாயத்தில் இருந்த வனப்பகுதி தற்காலிகமாக தப்பி உள்ளது. இதனால் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி பகுதியில் இரு நாட்களாக மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த போதும் மழை இல்லை. நேற்று மாலை கன்னிவாடி, மாங்கரை, கசவனம்பட்டி, காமாட்சிபுரம், கதிரனம்பட்டி பகுதியில் சாரல் பெய்தது.
