UPDATED : செப் 07, 2026 10:04 PM
ADDED : செப் 07, 2026 09:40 PM
வேடசந்தூர்:குடகனாறு ராஜவாய்க்கால் தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தி வேடசந்துாரில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் குடகனாறு ஆத்துார் காமராஜர் நீர்தேக்கம் வந்தடைந்து தாடிக்கொம்பு வேடசந்துார் வழியாக குடகனாறு அணைக்கு செல்கிறது. மொத்தம் 109 கி.மீ., துாரம் பயணித்து அரவக்குறிச்சி நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது.
இந்த ஆற்றில் காமராஜர் அணைக்கு மேற்கு பகுதியில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு தண்ணீர் திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குடகனாற்றில் நீர்வரத்து இல்லாமல் அணை, ஆற்றுப்பகுதி வறண்டுவிட்டது. சுற்றுப்பகுதி மக்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புச்சுவர் அமைத்ததற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜவாய்க்கால் தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தி வேடசந்துார் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வேடசந்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
