ADDED : ஆக 19, 2026 06:30 PM
எரியோடு, ஆக.20-
மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூலம் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த சோலார் விழிப்புணர்வு முகாம்கள் நாடு முழுவதும் நடக்கிறது.
திண்டுக்கல் மின்பகிர்மான வட்டம் சார்பில் வீட்டு மின் இணைப்பு வைப்போருக்காக எரியோட்டில் நடந்த முகாமிற்கு செயற்பொறியாளர் முத்துபாண்டியன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் சிவராமன், கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி, சுப்பிரமணி, கனரா வங்கி மேலாளர் கணேஷ் பங்கேற்றனர்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் பேசுகையில், ‘ஒரு கிலோ வாட் சோலார் சக்தி தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் மின் உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப கிடைத்துவிடும். வங்கிக்கடன் உடனே கிடைக்கும். அரசு மானியமாக ஒரு கிலோ வாட் திட்டத்திற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் வழங்கப்படும். தற்போது மின்சாரம் தயாரிக்க பயன்படும் எரிபொருள் ஆதாரங்கள் குறைந்து வரும் நிலையில் மின் நுகர்வும் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத சோலார் சக்தியை பயன்படுத்துவது காலத்தின் கட்டளை என்றனர்.
