ADDED : ஜூன் 26, 2025 01:46 AM

பழநி: பழநி நகராட்சி  9வது வார்டில் தேரோட்டம் நடைபெறும் முக்கிய வீதியில் தண்ணீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்
கிழக்கு ரத வீதி, மாரியம்மன் கோவில் சந்து, நடேசன் சன்னதி தெரு, கோசல விநாயகர் சந்து, அங்கண்ணன் தெரு, தெற்கு ரத வீதி, சுப்பா தெரு, பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில்  கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதிகளில் மாரியம்மன் கோயில் தேர், பெரியநாயகி அம்மன் கோயில் தேர், தைப்பூச தேர் உள்ளிட்ட முக்கியமான கோயில்  தேரோட்டம்  நடைபெறும். முக்கிய கோயில்கள் இப்பகுதியில் உள்ளதால் பழநி சுற்றுப்பகுதிகளில் இருந்து பக்தர்கள், வெள்ளி, சனி, அமாவாசை நாட்களில் அதிக அளவில் வருகின்றனர். இந்த வீதியில் உள்ள தண்ணீர் குழாய் சேதத்தால் மக்கள் பாதிக்கின்றனர்.
வீதிகளை சரிசெய்யுங்க
பிச்சப்பசிவம்,குருக்கள், தெற்கு ரத வீதி:   தெற்கு ரத வீதியில் பல நாட்களாக இரண்டு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதனை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறோம் .இதனால் இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத வீதிகள் சேதமடைந்துள்ளன.   இதனையும்  சரி செய்ய  வேண்டும்.
கால்நடைகளால் அவதி
சத்தியன், மிராசு பண்டாரம்,கிழக்கு ரத வீதி : தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன ரத வீதிகளில் சாலையை முற்றிலும் அகற்றி புதிதாக  ரோடு அமைத்து தர வேண்டும். தற்போது குண்டும், குழியுமாக உள்ளதால் விபத்தும் ஏற்படுகிறது.  இதை  தவிர்க்க சாலையை விரைந்து அமைக்க வேண்டும். நாய்,மாடு,குதிரை   தெருக்களில் சுற்றி வருவதால் மிகுந்த அவதி ஏற்படுகிறது .இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
சரி செய்யப்படும்
புஷ்பலதா,  கவுன்சிலர்  (அ.தி.மு.க.,)   : கிழக்கு ரத வீதியை சீராக்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு ரத வீதியில் பேட்ச் ஒர்க் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சாலையை புதிதாக அமைப்பதால் பல ஆண்டுகள் பிரச்னை இல்லாமல்  இருக்கும். நாய், மாடு, குதிரை தொல்லை அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.  குழாய்கள் சேதமடைந்துள்ளதால்  உப்பு தண்ணீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது அதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

