/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சூப்பர் ரிப்போர்ட்டர்: எரிவாயு தகன மேடை செயல்பாட்டிற்கு வருவது எப்போது
/
சூப்பர் ரிப்போர்ட்டர்: எரிவாயு தகன மேடை செயல்பாட்டிற்கு வருவது எப்போது
சூப்பர் ரிப்போர்ட்டர்: எரிவாயு தகன மேடை செயல்பாட்டிற்கு வருவது எப்போது
சூப்பர் ரிப்போர்ட்டர்: எரிவாயு தகன மேடை செயல்பாட்டிற்கு வருவது எப்போது
ADDED : ஆக 04, 2025 04:31 AM

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் ரூ.1.55 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை பணி முடிந்து 6 மாதங்களை கடந்தும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் வசதிக்காக விரைவில் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் எரிவாயு மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., தேன்மொழி இதற்கான நிதியை ஒதுக்கினார். அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்ததால் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. தொடர்ந்து 2022--23ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி எரிவாயு தகன மேடைக்காக ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளன. சரியான பாதுகாப்பு வசதி இல்லாததால் மயானத்தில் வைக்கப்பட்ட புதிய ஜெனரேட்டர் களவு போனது. தற்போது ஜெனரேட்டரும் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. செயல்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில் ஆறு மாதங்களாக எரிவாயு தகன மேடை பூட்டியே உள்ளது. ஒப்பந்ததாரருக்கு இறுதி கட்டப் பணிக்காக பில் பாஸாகவில்லை என்றும் முதல்வர் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது என்றும் ஆளுங்கட்சியினர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் பல யூகங்கள் பொதுமக்களால் பேசப்படுகிறது. இந்த தகன மேடை செயல்பாட்டிற்கு வந்தால் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயனடைவர். பொதுமக்களின் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் விரைவில் எரிவாயு தகன மேடையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சவுந்தரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர், மா.கம்யூ., நிலக்கோட்டை: பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த தகனமேடை மாநிலத்தில் முழுமை அடையாத மற்ற பணிகளுக்காக காத்திருப்பது பொது மக்களிடையே பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தயக்கத்திற்கான காரணம் என்ன
கருப்புசாமி,பா.ஜ., மாவட்ட பொருளாளர், கொடைரோடு:
எரிவாயு தகனமேடை பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயக்கம் என்ன. ஆளுங்கட்சியினர் வேறு எதுவும் எதிர்பார்த்து உள்ளனரா. எந்த ஒரு அரசு திட்டமும் பொதுமக்களுக்காக தானே. ஆளும் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதை உணர்ந்து எரிவாயு தகன மேடையை செயல்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்.