ADDED : டிச 13, 2025 05:49 AM
திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில் ,கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை. அபிஷேகம் நடந்தது. தேங்காய் வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை, ராகு கால பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேய்பிறை அஷ்டமி ராகு கால பூஜையில் வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாக தேவதைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சங்கல்பம் செய்து தேங்காயில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தேய்பிறை அஷ்டமி பூஜையை வாராகி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமி நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள்மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடைக்கானல் : சென்பகனுார் கால பைரவர், தாண்டிக்குடி பால முருகன், நாயுடுபுரம் டிப்போ பத்திரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிஷேகம்,பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

