/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தெரு விளக்குகளும் இல்லை; சாக்கடையும் இல்லை ஏக்கத்தில் ஒட்டன்சத்திரம் 6வது வார்டு மக்கள்
/
தெரு விளக்குகளும் இல்லை; சாக்கடையும் இல்லை ஏக்கத்தில் ஒட்டன்சத்திரம் 6வது வார்டு மக்கள்
தெரு விளக்குகளும் இல்லை; சாக்கடையும் இல்லை ஏக்கத்தில் ஒட்டன்சத்திரம் 6வது வார்டு மக்கள்
தெரு விளக்குகளும் இல்லை; சாக்கடையும் இல்லை ஏக்கத்தில் ஒட்டன்சத்திரம் 6வது வார்டு மக்கள்
ADDED : ஜூலை 12, 2025 04:59 AM

ஒட்டன்சத்திரம் : தெரு விளக்குகள், சாக்கடை இல்லாமல் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6 வது வார்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏ.பி.பி. நகர், பழநிகவுண்டன்புதுார், லட்சுமிபுரம், சண்முகவேல்புரம், அணைப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பழநிகவுண்டன்புதுார் பகுதியில் செல்லும் ஓடையில் செடிகள் முளைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் டூவீலர்களில் செல்ல சிரமமாக உள்ளது. பைபாஸ் ரோட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து பழநிகவுண்டன் புதுார் செல்வதற்கு நேரிடையான வழி இல்லாததால் பல கி.மீ. , சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஏ.பி.பி., நகரில் பூங்கா , பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. லட்சுமிபுரம், ஏ.பி.பி.நகர் விரிவாக்கப் பகுதிகளில் தெரு ரோடுகள் சேதமடைந்துள்ளது. பைபாஸ் ரோட்டில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துார்வாராததால் துர்நாற்றம்
ஒ.பி.காளிதாசன், சமூக ஆர்வலர், ஏ.பி.பி.நகர்: ஏ.பி.பி. நகர் விரிவாக்க பகுதிகளில் வீடுகள் கட்டி பல ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சாக்கடை வசதி இன்னும் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. குடிநீர் பிரச்னை இல்லை. ஏ.பி. பி. நகரில் பூங்கா , பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளதால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. சாக்கடைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
தேவை தெரு விளக்குகள்
கே. மாணிக்கம், பா.ஜ., கிளை தலைவர், பழநி கவுண்டன் புதுார்: பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்திலிருந்து பழனி கவுண்டன் புதுார் வரை செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்கிறது. பைபாஸ் ரோட்டை ஆபத்தின்றி கடப்பதற்கு பாலம் தேவை. பழநிகவுண்டன்புதுாரில் தேவையான இடங்களில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும். குப்பை அள்ளுவது கிடையாது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பாதசாரிகள் , டூவீலரில் செல்வோர் பாதிக்கின்றனர்.
கோரிக்கை நிறைவேற்றம்
சண்முகப்பிரியா, கவுன்சிலர் ( தி.மு.க.,): பழனி கவுண்டன் புதுார் ஓடையில் தடுப்புச் சுவர் ,தரைதளத்துடன் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கடையும் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. எரிவாயு மயானம் அருகே உள்ள குளம் மறுகால் செல்லும் வழியில் பாலம் அமைக்கப்பட்டு விபத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.செடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏ.பி.பி. நகர் மேற்கு விரிவாக்க பகுதியில் சாக்கடை அமைக்க அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் அமைக்கப்படும். பைபாஸ் ரோட்டில் இருந்து பழனி கவுண்டன்புதுார் செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் விரைவில் அமைக்கப்படும். வார்டு பகுதியில் தேவையான இடங்களில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்கப்படும். தெரு ரோடுகள், சாக்கடைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.