ADDED : ஏப் 26, 2026 11:15 PM
பாலசமுத்திரம்;பழநியில் பேக்கரி ஊழியர் கொலை வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன் 44. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பேக்கரியில் வேலை செய்தார். தேர்தலில் ஓட்டு அளிக்க சொந்த ஊருக்கு சென்ற முருகன் ஏப்., 24ல் பழநிக்கு வந்தார்.
அங்குள்ள மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த பாலசமுத்திரம், கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் 24, நாகராஜ் 20, சங்கிலித்துறை 22, ஆகியோருடன் முருகன் பேசி பழகினார்.
அதன்பின் பாலசமுத்திரம் செல்லும் பஸ்ஸில் ஏறிய போது முருகனுடன் தகராறு ஏற்பட்டது. வரட்டாறு பாலம் அருகே பஸ்ஸில் இருந்து இறங்கிய மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் முருகனை கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த அவர் ஏப்.,25 காலை இறந்தார்.
பழநி தாலுகா இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
