/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'விலை வீழ்ச்சி; மரவள்ளி சாகுபடி குறையும்'
/
'விலை வீழ்ச்சி; மரவள்ளி சாகுபடி குறையும்'
ADDED : மார் 02, 2025 01:42 AM
'விலை வீழ்ச்சி; மரவள்ளி சாகுபடி குறையும்'
ஈரோடு:மரவள்ளி கிழங்கு விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு டன், 5,500 ரூபாய்க்கு விற்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:
கடந்த, 20 ஆண்டுக்கு முன் மரவள்ளி கிழங்கு மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டது. குறைவான அளவே தண்ணீர் போதும் என்பதால், மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் ஒரு ஏக்கரில், 10 முதல், 15 டன் வரை மகசூல் கிடைப்பதால், சாகுபடி பரப்பு அதிகரித்தது.
கடந்த காலங்களில் முள்வேலி, பர்மா, ரோஸ் போன்ற ரகங்களை சாகுபடி செய்தனர். அப்போது ஒரு டன், 4,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்பனையானது. தற்போதைய புதிய ரகங்களான வெள்ளை தாய்லாந்து, கிளைமான், ஏத்தாப்பூர், கருப்பு தாய்லாந்து ரகம் அதிகமாக சாகுபடியாகிறது. ஈரோடு மாவட்டத்தில், 40,000 ஏக்கர் பரப்பில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இதன் அறுவடை காலம் நவ., முதல் மார்ச் வரையாகும்.
கடந்த மாதம் ஜவ்வரிசி, 90 கிலோ மூட்டை, 5,500 ரூபாய்க்கு விற்பனையாகி தற்போது, 3,500 ரூபாயாகவும், ஸ்டார்ச் மாவு, 4,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் மரவள்ளி கிழங்கு கடந்த மாதத்தில் மட்டும் குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்ததுடன், வருமாண்டில் மரவள்ளி கிழங்கு சாகுபடியை தவிர்த்து மாற்று பயிருக்கு செல்லவும் திட்டமிடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், சேகோ ஆலை நிர்வாகம், அதிகாரிகள், விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தி, குறைந்த பட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.----------------