ADDED : ஜன 18, 2025 01:33 AM
வட்டமலைகரை அணையில் அமைச்சர் ஆய்வு
வெள்ளகோவில், : வெள்ளகோவில் அருகேயுள்ள உத்தமபாளையம் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு, கடந்த, ௮ம் தேதி, பரம்பிக்குளம் பிரதான கால்வாயான சுள்ளிபாளையத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் அணைக்கு தண்ணீர் வந்தடைந்தது. முன்னதாக வழியோர கிராம மக்கள், தண்ணீர் வரும் நீர்வழிப்பாதையில் பொங்கல் வைத்தும், பூக்கள் துாவியும் வரவேற்றனர்.
இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வடசின்னாரிபாளையம் மற்றும் உத்தமபாளையம் வட்டமலைகரை பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார். அணை பகுதியில் தண்ணீரில் மலர்கள் துாவினார். அமைச்சருடன் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் கோகுல், தாசில்தார் மோகனன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.