ADDED : மார் 30, 2025 01:49 AM
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு
புன்செய்புளியம்பட்டி:பாசனத்திற்கு நீர் திறப்பு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி; நீர் இருப்பு, 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. மேலும் அணையில் இருந்து கீழ்பவானி பாசனம் மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 3,550 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 174 கனஅடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 78.67 அடியாகவும், நீர் இருப்பு, 14.9 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு, 2,300 கன அடி, அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 950 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு, 200 கன அடி மற்றும் குடிநீர் தேவைக்காக, 100 கன அடி என மொத்தம், 3,550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீர் வரத்தை விட, வெளியேற்றம் கூடுதலாக உள்ளதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.