/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இளைஞர்கள் இயந்திர உறவுகளுடன் வாழ்கிறான்'
/
இளைஞர்கள் இயந்திர உறவுகளுடன் வாழ்கிறான்'
ADDED : ஆக 09, 2025 01:56 AM
ஈரோடு, ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை, அரசு சார்பில் நடந்து வரும் ஈரோடு புத்தகத்திருவிழாவின் நேற்றைய மாலை நேர அரங்குக்கு, சண்முகா சால்ட் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன், 'குழந்தைகளோடு கதையாடு' என்ற தலைப்பில் பேசியதாவது: தற்போதைய மாணவர்களுக்கான கவனச்சிதறல்கள் அதிகம். இன்ஸ்டாகிராமில் தங்கள் வாழ்க்கையை செலவிடுகின்றனர். இதுபற்றிய ஆய்வு முடிவில், 73 சதவீதம் குழந்தைகள் தங்கள் உடல், முகம், உருவம் அழகாக இல்லை என்ற எண்ணமும், அதற்காக என்னென்னமோ செய்து, மற்றவர்களை தங்கள் மீது கவனம் செலுத்த வைப்பதில் ஆபத்தாக ஈடுபடுவதாக கூறுகிறது. 16 முதல், 18 வயதுக்குள், 98 சதவீத மூளை வளர்ச்சி அடையும். அப்போது என்ன பழகுகிறோமோ, அதையை தொடர்வர்.
இதற்கெல்லாம் சிறந்த தீர்வு, குழந்தைகளை புத்தகங்கள் படிக்க சொல்லுங்கள். கதை படிக்க செய்யுங்கள். அவர்களுடன் நீங்களும் படியுங்கள். கதைகளை கூறுங்கள். வாழ்க்கையை அதில் சொல்லுங்கள். கதை சொன்னால், கற்பனை வளரும். புத்தகங்களை நோக்கி குழந்தைகளை இழுத்து செல்லுங்கள்.
இவ்வாறு பேசினார்.
'அறிவை விரிவு செய்' என்ற தலைப்பில், நடிகர், கவிஞரான ஜோ.மல்லுாரி பேசியதாது: அறிவியல் மனிதனின் தேவையை பார்க்கும். 1,800 ஆண்டுகளுக்கு பின் தான் அறிவியல் விஸ்வரூபம் எடுத்தது. அதற்கு முன் அறவியல் மூலமே வாழ்ந்தோம்.
ஆசிரியர்களிடம் இருந்து அறிவு சார்ந்த கல்வி பெறலாம். பெற்றோர்களிடம் இருந்து குணம், நலம் பெறலாம். அப்போதுதான் சமூகம் சிறக்கும். அதற்கு மாறாக இன்றைய இளைஞர்கள் இயந்திர உறவுகளுடன் வாழ்கிறான். அவர்கள் உயிருள்ள உறவுகளுடன் இல்லை, என்பதை பார்க்க முடிகிறது. முரண்பட்ட வாழ்வில் வாழ்கிறோம். கோவிலிலும், மதுக்கடையிலும் கூட்டம் அதிகம் உள்ளது. சம நிலை கொண்ட மனிதர்களுக்கு இவை இரண்டும் தேவையில்லை.
தற்போது செயற்கை நுண்ணறிவு வருவது, மேலும் ஆபத்தை தரும். அலைபேசி, நமது வாசிப்பு திறனை இழக்க செய்தது. செயற்கை நுண்ணறிவு நமது யோசிக்கும் பழக்கத்தை இழக்க செய்துவிடும்.
இவ்வாறு பேசினார்.

