ADDED : மார் 29, 2026 02:32 AM
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநகர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த, மனோகரன் நேற்று காலை சென்றார். அவரது ஆதரவாளர்கள் மேளதாளங்கள் முழங்க சால்வை அணிவித்து வரவேற்றனர். இதையடுத்து ப.செ.பார்க்கில் உள்ள சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். இதனிடையே மனோகரன் அறிவிக்கப்பட்டதற்கு, முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: வழக்கமாக அ.தி.மு.க., வேட்பாளர்கள், கட்சி அலுவலகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, அலுவலகத்துக்குள் அமர்ந்து, நிருபர் சந்திப்பை நடத்துவர். ஆனால், அப்படி தற்போது நடக்கவில்லை. அலுவலக வாசற்படியை கூட மிதிக்க விடாமல், அடுத்த நிகழ்ச்சிக்கு வேட்பாளர் அழைத்து செல்லப்பட்டார். ப.செ.பார்க்கில் நடந்த நிருபர்கள் சந்திப்புக்கு முன், இதுவரை ஸ்கிரீனில் இல்லாதவர் இனி வரபோகிறார் எனவும் மூத்த நிர்வாகி ஒருவர், வித்தியாச தொணியில் பேசினார். இது வழக்கமான ஆரம்பக்கட்ட எதிர்ப்பாக இருந்து விட்டால் பிரச்னையில்லை. அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் இது எதிரொலித்தால், மனோகரனுக்கு தலைவலியாகவே அமையும்.
இவ்வாறு கூறினர்.
