ADDED : நவ 08, 2025 04:53 AM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே வெங்க நாயக்கன்பாளையத்தில் மதுர கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கோவில் கதவு நேற்று காலை இருந்ததை கண்ட மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து, புன்செய் புளியம்பட்டி போலீசார் மற்றும் அறங்காவலர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆய்வில் அம்மன் கருவறையில் இருந்த பீரோவை உடைத்து, 30 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது தெரிந்தது.
அதேபோல் புன்செய் புளியம்பட்டி அருகே தாசம்பாளையம் வீரமாத்தி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து, அம்மன் பட்டு சேலை, வெள்ளி பொருட்கள் திருட்டு போயுள்ளது. கடந்த, 3ம் தேதி இரவு பனையம்பள்ளி, சொலவனூர் மேடு கன்னிமார் கருப்பராயன் கோவிலில், 15 ஆயிரம் ரூபாய், எல்.ஈ.டி., டிவி, வெள்ளிக்குடை திருட்டு போனது. அதில் ஈடுபட்ட கொள்ளையரே சிக்காத நிலையில், மேலும் இரு கோவில்களில் திருட்டு நடந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

