ADDED : ஏப் 01, 2024 04:03 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே, தனியார் விடுதியில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலினை, வணிகர்கள், வர்த்தகர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர், நேற்று சந்தித்து மனு வழங்கினர்.
* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகவேல், லாரன்ஸ் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கிய மனுவில் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட அனைத்து வணிக மைய கட்டடங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், ஏற்கனவே அங்கிருந்த வணிகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். அவ்வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஈரோடு மாநகர பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயப்பட்டறைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பொது சுத்திகரிப்பு நிலையம் ஈரோட்டில் விரைவாக அமைக்க வேண்டும். உணவு தானியங்களை சேமிப்பு இருப்பு வைக்க குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும்.
* அனைத்து கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கூட்டமைப்பு கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் செங்காளியப்பன், முப்பிடாதி வழங்கிய மனுவில் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறப்பித்த அரசாணைப்படி, எழுத்து தேர்வின்றி, நேர்முக தேர்வு, பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் நியமனம் நடந்ததுபோல, தற்போதும் தொடர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, 4,000 உதவி போராசிரியர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என வலியுறுத்தினர்.
* ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் ரவிசந்திரன் வழங்கிய மனுவில் கூறியதாவது:
வருமான வரிச்சட்டத்தில், 45 நாட்களுக்கு மேற்பட்ட பாக்கி தொகைக்கு வருமான வரி விதிக்கவும், எம்.எஸ்.எம்.இ., சட்டப்படி, மத்திய வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதப்படி, 3 மடங்கு வட்டி செலுத்த வலியுறுத்துகிறது.
இச்சட்டத்தால், பெரிய நிறுவனங்களுடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் போட்டியிட்டு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இச்சட்டத்தை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு என்றில்லாமல், அனைவருக்கும் பொருந்தும்படி மாற்ற வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

