/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிஏப்ரலில் சோதித்துப்பார்க்க நடவடிக்கை
/
100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிஏப்ரலில் சோதித்துப்பார்க்க நடவடிக்கை
100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிஏப்ரலில் சோதித்துப்பார்க்க நடவடிக்கை
100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிஏப்ரலில் சோதித்துப்பார்க்க நடவடிக்கை
ADDED : மார் 20, 2025 01:55 AM
100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிஏப்ரலில் சோதித்துப்பார்க்க நடவடிக்கை
வாசிப்பு திறன் வளர்ப்புக்கு, 100 நாள் சவாலை ஏற்ற, 4,552 துவக்கப்பள்ளிகளின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரலில், பொது வெளியில் பள்ளி மாணவர்களின் திறனை சோதித்துப்பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் - 24,310, நடுநிலைப்பள்ளிகள் - 7,024 உள்ளன. இவற்றில் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட தேசிய கற்றல் அடைவு மதிப்பீட்டில், வாசிப்பு திறன் மற்றும் கணித அடிப்படை திறனில், மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருந்தது. இதையடுத்து, 'மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தரத்தில் அல்ல; தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க கூட பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களுக்கு தெரியவில்லை' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு, 'கொரோனா சூழலால்தான் வாசிப்பு திறனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என, தமிழக அரசு கூறிவிட்டு, துவக்கப்பள்ளிகளில் வாசிப்பு திறன், கணித அடிப்படை திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, '100 நாள் சவால்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் பங்கேற்கும் பள்ளிகள், 100 நாட்களில், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன், கணித அடிப்படை திறனை அடைந்தவர்களாக மாற்ற வேண்டும் எனக்கூறி, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த சவாலில், 4,552 பள்ளிகள், கடந்த டிசம்பரில் பதிவு செய்தன. தற்போது, 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பொது வெளியில் மாணவர்களின் வாசிப்பு திறன், கணித அடிப்படை திறனை சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சவாலில் பங்கேற்ற பள்ளிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 157 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் வரும் ஏப்ரலில், முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில், அந்த பள்ளிகளில் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்னிலையில், தமிழ், ஆங்கில வாசிப்பு திறன், கணித அடிப்படை திறன் சோதிக்கப்பட உள்ளது.
நமது நிருபர்