ADDED : மே 23, 2024 06:54 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், பங்களாபுதுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.ஜி.புதுார், 4 ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.ரேஷன் அரிசி கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் எஸ்.ஐ., மூர்த்தி உள்ளிட்ட போலீசார், அவ்வழியாக வந்த டாடா வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில், 26 மூட்டைகளில், 1,300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.ரேஷன் அரிசியை கடத்தி வந்த பெருந்துறை தாலுகா, ஈங்கூர் நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த உதயகுமார், 31, கோபி, கணக்கம்பாளையம் பாரதி தெருவை சேர்ந்த ரமேஷ், 36, ஆகியோரை விசாரித்தனர். கோபி, டி.என்.பாளையம் பகுதியில், பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகா மாநிலம், கொள்ளேகால் பகுதியில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்து, 26 மூட்டைகளில் இருந்த, 1,300 கிலோ ரேஷன் அரிசி, டாடா வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
