ADDED : மே 29, 2026 06:06 AM

புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே டூவீலரில் வந்து, ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லுார் மாதேஸ்வரன் கோவில் தோட்டத்தை சேர்ந்த விவசாயி அண்ணாமலை, 46; தோட்டத்தில் ஆடு வளர்த்து வருகிறார். கடந்த, 22ம் தேதி இரவு வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். மறுநாள் காலை சென்றபோது நான்கு ஆடுகளை காணவில்லை.
அவரது புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், களவாணிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக பவானிசாகரை அடுத்த அண்ணாநகரை சேர்ந்த பழனிச்சாமி, 52, கார்த்திக், 24, ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். டூவீலரில் வந்து ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், திருட்டுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
கைதான கார்த்திக் மீது, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார்
தெரிவித்தனர்.
