ADDED : மார் 25, 2026 07:08 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிக்கு தேவையான எண்ணிக்கையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும், 30ல் மனுதாக்கல் துவங்க உள்ளதால், அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில், 2,379 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில், 73 ஓட்டுச்சாவடி பதற்றமானவை என கருதப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டு சாவடியிலும் உள்ளே மற்றும் வெளியே 'வெப் கேமரா' அமைத்து கண்காணிக்கப்படும்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு மின்னணு பேலட் யூனிட், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு வி.வி.பேட் என, 2,379 இயந்திரங்கள் தேவைப்படும்.
இதில் பழுது ஏற்படும் என்றால் மாற்று ஏற்பாடு செய்யும் வகையில், 20 சதவீதம் பேலட் யூனிட், 20 சதவீதம் கட்டுப்பாட்டு இயந்திரம், 30 சதவீதம் வி.வி.பேட் கூடுதலாக அனுப்பி உள்ளோம். ஒருவேளை 2 பேலட் யூனிட் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், மற்ற மாவட்டம் அல்லது தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்படும். ஒரு ஓட்டுச்சாவடியில் ஒரு தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், 1, 2, 3 என்றும், 1,200 ஓட்டுக்கு மேல் இருந்தால், நான்காவது அலுவலரும் நியமிக்கப்படுவர்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் நிரவல் மூலம், 1,200க்கு மேல் எங்கும் இல்லை. எனவே, நான்கு பேர் மட்டுமே பணியில் இருப்பர்.
இவ்வாறு கூறினார்.
