ADDED : நவ 06, 2025 01:52 AM
கோபி :கோபி நகராட்சியில் இதுவரை, 506 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோபி நகராட்சிக்கு உட்பட்ட டவுன் பகுதியில், தெருநாய்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவில், கடந்த ஜூலையில், நகராட்சி சார்பில் நாய்கள் பராமரிப்பு விடுதி மற்றும் இனப்பெருக்க தடுப்பு மையம் திறப்பு விழா கண்டது.
அங்கு விலங்குகள் நலவாரியம் விதிப்படி, முறையாக பயிற்சி பெற்றவர்கள் மூலம், தினமும் காலை 6:00 முதல், 11:00 மணி வரை, கோபி டவுனுக்குள் சுற்றி வலம் வரும் தெருநாய்களை பிடிக்கின்றனர்.
பின் பிடிபட்ட நாய்க்கு முறையாக உணவு வழங்கி, குறிப்பிட்ட நாட்களுக்கு அதன் ஆரோக்கியம் பேணி, கால்நடை மருத்துவ டாக்டர் குழுவினர் மூலம், அந்த மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்கின்றனர்.
அதன்பின் மீண்டும் குறிப்பிட்ட நாட்கள் பராமரிப்புக்கு பின், அதை திருப்பி அதே இடத்தில் விட்டு விடுகின்றனர். அதன்படி கோபி நகராட்சியில் மட்டும் மொத்தம் 1,821 தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர். அவற்றில் இதுவரை, 506 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் அதன் இடத்திலேயே விட்டுள்ளதாக
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
