ADDED : ஏப் 13, 2026 06:10 PM
ஈரோடு: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, துணை ராணுவ வீரர்கள், 630 பேர் ஈரோடிற்கு வந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கும், போதிய போலீசார் இல்லை. எனவே, தேர்தலை அமைதியாக, ஜனநாயக முறையில் நடத்த ஏதுவாக, துணை ராணுவத்தினரை அனுப்ப கோரிக்கை விடப்பட்டிருந்தது.
ஏற்கனவே மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், கேரள மாநில ஆயுதப்படையினர், 180 பேர் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 630 துணை ராணுவத்தினர் ஈரோடு வந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'துணை ராணுவத்தினர் முழுமையாக வந்துள்ளனர். கூடுதலாக, 90 துணை ராணுவ வீரர்கள், ஓட்டுப்பதிவுக்கு முன் வருவார்கள் என, எதிர்பார்க்கிறோம். இன்னும் கர்நாடக மாநில ஊர் காவல் படை வீரர்கள், கேரள மாநில போலீசார் வர வேண்டியுள்ளது' என்றனர்.
