/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரசாரத்தை துவங்கி அ.தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
/
பிரசாரத்தை துவங்கி அ.தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
ADDED : பிப் 13, 2026 04:30 AM
ஈரோடு: கூட்டணியை உறுதி செய்து, வாக்குறுதிகளை அ.தி.மு.க., தலைமை வழங்கி வரும் நிலையில், அக்கட்சியினர் வேட்பாளர் பெயர் கூறாமல் பிரசாரத்தை துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் தேர்தலை பொறுத்தவரை, அ.தி.மு.க.,தான் தொகுதி மற்றும் வேட்பாளர்களை முதலில் அறிவித்து, பிரசாரத்தை துவக்கும். இதுதான் ஜெயலலிதாவின் பாணி. தற்போது இ.பி.எஸ்., இரு கட்டமாக, 11 தேர்தல் வாக்குறுதி அறிவித்துள்ள நிலையில், அதையே நோட்டீஸாக அச்சிட்டு அக்கட்சியினர், பிரசாரத்தை துவங்கி
உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., கருப்பணன், கிராமம் கிராமமாகவும், பவானி நகராட்சி பகுதியிலும் தினமும் காலை, மாலை பிரச்சாரம், முக்கிய நபர்கள் சந்திப்பு, சிறிய அமைப்புகளை பார்த்து பேசி வருகிறார்.ஈரோடு மாநகர பகுதியில் ஈரோடு கிழக்கு, மேற்கு என இரு தொகுதிகள் உள்ளன. இதில் பகுதி செயலர்கள் மனோகரன், பழனிசாமி, கேசவமூர்த்தி, பரமசிவம், ஜெகதீசன் உள்ளிட்டோர் தங்கள் பகுதி வார்டுகளில் பிரசாரம் செய்கின்றனர்.
பெருந்துறை சிட்டிங் எம்.எல்.ஏ., ஜெயகுமார், கடந்த நான்கே முக்கால் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணிகள், சொந்த செலவில் செய்து கொடுத்த பணிகளை பட்டியல் போட்டு, பிரசாரத்தையும் தொடர்ந்துள்ளார். மொடக்குறிச்சி பகுதியிலும் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியம் தலைமையில் பிரசாரம் தொடங்கியுள்ளது.
கோபி, அந்தியூர், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளுக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளராக உள்ளதால், இத்தொகுதிகளில் மட்டும் பிரசாரம் முழுமையாக துவங்காத நிலை உள்ளது. இம்மூன்றும், 2021ல் அ.தி.மு.க., வென்ற தொகுதிகளாகும்.

