ADDED : மார் 05, 2025 06:15 AM
ஈரோடு: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் மணிமாலை தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ராதாமணி, மாவட்ட செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் பூங்கொடி வரவேற்றார். கடந்த, 1993ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலுாட்டுவோர், 6 மாதம் முதல், 25 மாதம் வரை மையத்தில் இணை உணவை வாங்கும் பயனாளிகள் போட்டோவை பேஸ்-கேப்சர் மூலம் பதிவேற்றம் முறையை கைவிட வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மினி மையத்தில் இருந்து பிரதான மைய ஊழியராகுவோர், 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி, உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது, மாவட்ட அளவிலான முதுநிலை பட்டியல் தயாரித்து, சீனியாரிட்டி வழங்கவும் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சீனிவாசன், விஜயமனோகரன், ரமேஷ், சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர்.
