/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
/
21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
ADDED : டிச 28, 2025 07:43 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வனத்துறை சார்பில், 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.
வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டம் ஈரோடு, சத்தி, ஆசனுார் ஆகிய வனக்கோட்டங்களில், பணி தொடங்கியது. ஈரோடு வனக்கோட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி அருகே வெங்கம்பூர், அவல்பூந்துறை, கனகபுரம், வெள்ளோடு சின்னக்குளம், பெரியசடையம்பாளையம், அந்தியூர் வரட்டுப்பள்ளம், பெரிய ஏரி, தண்ணீர்பள்ளம் ஏரி, ஓடத்துறை, சென்னம்பட்டி, ஜெர்த்தல் ஏரி, பாலாறு பகுதியில் 2 நீர்த்தேக்கங்கள், தட்டக்கரை குட்டை, தாமரைக்கரை குளம், முதுகண்டிபள்ளம், கெட்டிசமுத்திரம், ராசன்குளம், சந்தியபாளையம், கொளத்துக்காடு, எண்ணமங்கலம் ஏரி என, 21 இடங்களின் நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதில் வனத்துறையினருடன், இயற்கை ஆர்வலர், பேராசிரியர், கல்லுாரி மாணவ, மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை, பரவல் குறித்து தரவுகள் சேகரித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சியாக இந்த கணக்கெடுப்பு இன்று, நாளை நடக்கிறது. நீர் பறவைகள், தரை பறவைகள் என அனைத்து வகை பறவைகளும் கணக்கிடப்படும். இவ்வாறு கூறினர்.
பெரியார் சரணாலயத்தில்அந்தியூர் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட பொன்னாச்சியம்மன் கோவில் வனப்பகுதி, வரட்டுப்பள்ளம் அணை, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் அந்தியூர் பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் வலசை பறவைகளான செஞ்செதில் தவிட்டு புறா, சோளக்குருவி, அரச வேதிவால் குருவி, வெண்புருவ சின்னான் மற்றும் நீலபூச்சி பிடிப்பான், வேலிகதிர் குருவி, சாம்பல் நாரை, பாம்பு தாரா, காட்டு மைனா உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பறவைகள் தென்பட்டன.

