ADDED : ஏப் 08, 2026 06:19 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள, தேர்தல் நிலை கண்காணிப்பு குழு சோதனைச்சாவடியில் அலுவலர்கள் இல்லாததால், வாக்காளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு-நாமக்கல்-சேலம் மாவட்ட எல்லையில் உள்ளது, கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி. தேர்தலை ஒட்டி நிலை கண்காணிப்பு குழு சோதனைச்சாவடி ஏற்படுத்தப்பட்டு, பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இரு தினங்களாக நிலை கண்காணிப்பு குழு சோதனை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எல்லை பகுதியில் நான்கு மணி நேரமும், மீதி நான்கு மணி நேரம் ஈரோடு-காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் அருகே, தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதன்படி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும், 10 முதல் 12 மணி நேரம் வரை நிலை கண்காணிப்பு குழு கண்காணிப்பு, சோதனையின்றி மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி இருக்கிறது.
இதுபற்றி வாக்காளர்கள் கூறியதாவது:
மாவட்ட எல்லையில் நிலை கண்காணிப்பு குழு சோதனையால் பணம், பரிசு பொருட்கள் வருவது பெருமளவில் குறைந்தது. இரு தினங்களாக சுழற்சி அடைப்படையில் தான் நிலை கண்காணிப்பு குழுவினர் பணி செய்கின்றனர்.
இதனால் பணம், பரிசு பொருட்கள் ஈரோடு மாநகருக்குள் வருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ள்ளது.
காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் அருகே வாகன தணிக்கை மேற்கொள்வதை விட மாவட்ட எல்லையில், 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபடுவது தேர்தலை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே மீண்டும் மாவட்ட எல்லையில் 24 மணி நேரமும் நிலை கண்காணிப்பு குழு சோதனையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
