ADDED : ஏப் 24, 2026 05:03 AM
ஈரோடு: ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சோலாரில், கிரீன் பார்க் பில்டர்ஸ் அலுவலகம் உள்ளது. இதன் உரிமையாளர் வெங்கடேஸ்வரன். 60வது வார்டு தி.மு.க., பிரதிநிதி. இந்த அலுவலகத்தில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பறக்கும் படையினருக்கு புகார் சென்றதால், நேற்று காலை அங்கு சென்று சோதனை செய்தனர். இதில், 8.20 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
பறக்கும் படைக்கு புகாரளித்தது மட்டுமின்றி, த.மா.கா., வேட்பாளர் யுவராஜா மற்றும் அக்கட்சியினர், கிரீன் பார்க் பில்டர்ஸ் அலுவலக முன்புறம் வந்தனர். அதே
சமயம் தகவலறிந்து வருமான வரித்துறையினரும் அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தனர். வருமான வரித்துறையினரின் காரை த.மா.கா., மற்றும் அ.தி.மு.க.,வினருடன் இணைந்து, யுவராஜா முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து தாலுகா போலீசார் வந்தனர். அலுவலகத்துக்கு அருகேயுள்ள வீட்டிலும் ரெய்டு நடத்த வேண்டும். பணம் கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி அலுவலகத்தின் அருகில் சண்முகம், 80, என்பவர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து த.மா.கா., மற்றும் அ.தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர். இதனால் காலை, 11:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை பரபரப்பு நீடித்தது. பறக்கும் படையினர் புகார் கொடுக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தாலுகா போலீசார் கூறினர்.
