/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கோவிலில் ஓராண்டில் கும்பாபிஷேகம்
/
சென்னிமலை கோவிலில் ஓராண்டில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 08, 2011 03:19 AM
சென்னிமலை: ''சென்னிமலை முருகன் கோவிலில் ஓராண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,'' என, உதவி ஆணையர் தனபாலன் கூறினார்.
சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தேவஸ்தானம் சார்பாக, பல திருக்கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின், மாநிலம் முழுவதும் கோவில் அறங்காலவர்கள் ராஜினாமா செய்தனர். இதன்படி, இக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கனகசபாபதியும், பதவியை ராஜினாமா செய்தார். புதிய அறங்காவலர்களை, அரசு நியமிக்கவில்லை. அதற்கு பதிலாக, தக்கார் பதவி ஏற்படுத்தப்பட்டு, உதவி ஆணையர்கள் பொறுப்பேற்று வருகின்றனர். சென்னிமலை முருகன் கோவில் தக்காராக, அறநிலையத் துறை உதவி ஆணையர் தனபாலன் பொறுப்பேற்றார். பொறுப்புகளை செயல் அலுவலர் பசவராஜன் ஒப்படைத்தார். தக்கார் தனபாலன் கூறியதாவது: கோவில் திருப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ராஜகோபுர பணியும், சிற்ப வேலைப்பாடும் நிறைவடைந்த நிலையில், வர்ணம் தீட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. மலை மீது அலுவலகம், தங்க ரதம் பணிகள் ஆகியவை ஓராண்டுக்குள் நிறைவடையும். தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.அக்னி நட்சத்திர விழாக்குழு பழனிவேல், சுப்புசாமி, மங்கள வார விழாக்குழு சார்பாக வேலுசாமி, சுரேகா செல்வகுமார், சென்னிமலை வணிகர் சங்கம் சார்பாக பூமலைசுந்தர் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைமை எழுத்தர் ராஜீ, கோவில் தமிழ்புலவர் அறிவு ஆகியோர் செய்திருந்தனர்.

