ADDED : செப் 08, 2011 03:02 AM
ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில் ஒருங்கிணைந்த சுகாதாரப்பணி நடந்தது.ஈரோடு
மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாகவும், குப்பை இல்லாத மாவட்டமாக்க,
மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதியில்
ஒருங்கிணைந்த துப்புரவு பணி நடக்கிறது. நேற்று காலை ஈரோடு, பெரியார் நகர்,
'ஈ' பிளாக்கில் துவங்கி சூரம்பட்டி வலசு வரை, 120க்கும் மேற்பட்ட துப்புரவு
பணியாளர்கள் சாலையோர குப்பையை அகற்றி, சாக்கடையை சுத்தம் செய்தனர்.
இப்பணிகளை துவக்கி வைத்த கலெக்டர் காமராஜ், ''மழைக்காலம் துவங்குவதால்,
அதிக அளவு கழிவுநீர் வெளியேறும். அதற்கு முன், மிக விரைவாக பாதாளச்சாக்கடை
பணியை முடிக்க வேண்டும்'' என, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி தலைமை பொறியாளர் வடிவேல், செயற்பொறியாளர் ஆறுமுகம், ஈரோடு
வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

