/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தலன்று பூத் ஏஜன்ட்கள் வெளியே செல்ல தடை
/
தேர்தலன்று பூத் ஏஜன்ட்கள் வெளியே செல்ல தடை
ADDED : அக் 07, 2011 12:57 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து
கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.கலெக்டர் சண்முகம் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடத்த தேவையான அனைத்து
ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இறுதி வேட்பாளர்
பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டதால், அனைத்து வேட்பாளர்களும் தீவிர
பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அனைத்து வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டிய
மாதிரி நன்னடத்தை விதிமுறைகள், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை
முழுமையாக கடைபிடித்து, ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது விதிமுறையை பின்பற்ற
வேண்டும்.வாக்காளர்கள் ஓட்டுப்போட தேவையான வகையில் அனைவருக்கும் அரசு மூலம்
பூத் ஸ்லிப் வழங்கப்படும். மலைப்பகுதியில் வாக்காளர்கள் வெகுதூரம் சென்று
வாக்களிக்க சிரமம் உள்ளதால், கடந்த சட்டசபை தேர்தலின்போது
கடைபிடிக்கப்பட்டது போல், அவர்களுக்கு சென்று வர தேவையான போக்குவரத்து
வசதியை, அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு
பகுதியில் இருந்தும் வாக்காளர்கள் ஓட்டுப்போட சென்று வர தேவையான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். இதுகுறித்து அந்தந்த பகுதி ஓட்டுப்பதிவு அலுவலர்கள்
கலந்தாலோசனை செய்து ஏற்பாடுகளை செய்வர்.வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு
மையத்தில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தங்களுக்கான பூத் அமைத்துக்
கொள்ள வேண்டும். வேட்பாளரால், ஓட்டுப்பதிவு மையத்தில் நியமிக்கப்படும்
ஏஜன்ட், ஓட்டுப்பதிவு துவங்கும் முன் அம்மையத்தில் இருக்க வேண்டும்.
அவர்களுக்காக வழங்கப்படும் அடையாள சீட்டை அவர்கள் கட்டாயம் வைத்திருக்க
வேண்டும்.
ஏஜன்ட்கள் ஓட்டுப்பதிவு மையத்தில் இருந்து வெளியே சென்று,
திரும்ப அனுமதி இல்லை.வாக்காளர்களை அழைத்து வர வேட்பாளர் மற்றும் அவர்களைச்
சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை. வேட்பாளர்கள் விளம்பரம் செய்யும் போது,
அனுமதி பெறாத சுவரொட்டிகள், சுவர்கள், ஒலிபெருக்கி மூலம் விளம்பரம்
செய்யக்கூடாது. அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது.உள்ளாட்சி
தேர்தலை அமைதியாக, சுதந்திரமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.டி.ஆர்.ஓ., கார்த்திகா,
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜேந்திரபிரசாத் உட்பட அனைத்து
கட்சியினர் பங்கேற்றனர்.

