ADDED : அக் 12, 2011 01:38 AM
ஈரோடு: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்க, ஈரோடு
கனி மார்க்கெட்டில், அரசியல் கட்சியினர் துணி கொள்முதல் செய்தனர்.
அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி என்ற நிலையில், போட்டியை சமாளிக்க
தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. சில கட்சி வேட்பாளர்கள் ஓட்டு
வங்கியை சேகரிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, அரிசி, ஜவுளி
விநியோகம், விருந்து வைத்தல் போன்ற யுக்திகளை கையாள்கின்றனர்.தேர்தல்
பிரச்சாரம் முடிய, ஐந்து நாட்களே உள்ளதால், கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாக
சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். நேற்று, ஈரோடு கனி மார்க்கெட்டில்
நடந்த ஜவுளி சந்தையில், அரசியல் கட்சியினர் சிலர், ஏராளமான ஜவுளி கொள்முதல்
செய்தனர்.வியாபாரி ஒருவர் கூறுகையில், ''பண்டிகை சீஸன் சூடுபிடித்துள்ள
நிலையில், உள்ளாட்சி தேர்தலும் சூடுபிடித்துள்ளது. கட்சியினர் சிலர்
எங்களிடம் மொத்தமாக சேலை, வேட்டிகளை வாங்கி சென்றனர். பலர், ஆர்டர்
கொடுத்து சென்றுள்ளனர்,'' என்றார்.

