ADDED : பிப் 06, 2026 04:18 AM
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்
ஆவேசம்; 7 பேர் மீது வழக்கு
கோபி: திருப்பூரை சேர்ந்தவர் தினேஷ், 30; நாமக்கல்லை சேர்ந்த தனம், 27, என்பவரை, கோபியில் காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து, நேற்று முன்தினம் மாலை விசாரித்தனர்.
அப்போது தனத்தின் தந்தை சுரேஷ்குமார், 48, ஸ்டேஷனில் இருந்த டேபிளை கையால் குத்தியதில் கண்ணாடி உடைந்தது. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. சுரேஷ்குமாருடன் வந்த ஜான் முரளியும் டேபிளை கையால் குத்தியுள்ளானார். இந்நிலையில் சுரேஷ்குமார் உட்பட ஏழு பேர் மீது, அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெருநாய்கள் கடித்து
11 ஆடுகள் பலி
சென்னிமலை: வெள்ளோட்டை அடுத்த தேவனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா. இவரது தோட்டத்தில் குமார் என்பவர், குத்தகை முறையில் பட்டி அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, 29 ஆடுகளை பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து சென்றார். நேற்று காலை, 6:௦௦ மணி அளவில் வேலிக்குள் தெருநாய்கள் புகுந்து, ஆடுகளைக் கொடூரமாக் கடித்துக் குதறின. இதில், 11 ஆடுகள் பலியாகி விட்டன. எட்டு ஆடுகள் படுகாயமடைந்தன.
வெள்ளோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 11 ஆடுகள் பலியானது, கால்நடை வளர்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உரிய நிவாரணம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.
பங்களாதேஷ் இளைஞர்கள்
பங்களாப்புதுாரில் சிக்கினர்
டி.என்.பாளையம்: ஈரோடு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், பங்களாப்புதுாரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த, 19 வயது மற்றும் 25 வயது வாலிபர்கள் இருவரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். இருவரும் உரிய ஆவணமின்றி, கடந்த சில மாதங்களாக தங்கி இருப்பதும், திருப்பூரில் தனியார் டெக்ஸ்டைல் நிறுனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள முகாமுக்கு அனுப்பி
வைத்தனர்.

