ADDED : ஜூன் 19, 2026 05:24 AM

ஈரோடு:ஈரோடு
மாவட்டம் பெருந்துறை சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
இங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு, தேர்தல் முன்னேற்பாடு
பணி நடந்து வருகிறது.
ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள,
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,) பாதுகாப்பு
கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இ.வி.எம்., - கட்டுப்பாட்டு
இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி
பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் கடந்த,
16ல் முதல் சரிபார்ப்பு பணி துவங்கியது. இப்பணிக்காக 'பெல்'
நிறுவனத்தில் இருந்து, 6 பொறியாளர்கள் வந்து, இயந்திரங்களின் செயல்
திறன், தொழில் நுட்ப தகுதி, பயன்பாட்டு திறனை சரி பார்த்து
வருகின்றனர்.
பெருந்துறை தொகுதியில், 292 ஓட்டுச்சாவடிகள்
உள்ளதால், 200 சதவீதம் இயந்திரங்கள் தேவை என்ற அடிப்படையில், தலா,
584 இ.வி.எம்., - கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை
தனியாக எடுத்து பரிசோதனை செய்து, செயல்பாட்டை உறுதி செய்து
வருகின்றனர்.
நேற்று, மூன்றாவது நாள் என்ற அடிப்படையில் 70
சதவீதம் பணி முடிந்துள்ளதை கலெக்டர் கந்தசாமி, கூடுதல் தலைமை தேர்தல்
அலுவலர் மற்றும் கூடுதல் செயலர் வி.ஸ்ரீதர், அப்பணியை ஆய்வு செய்தார்.
உதவி
இயக்குனர் (டவுன் பஞ்.,கள்) வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக
உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, தேர்தல் பிரிவு தாசில்தார்
சண்முகசுந்தரம் உட்பட அலுவலர்கள்
பங்கேற்றனர்.
