ADDED : மே 20, 2024 01:58 AM
ரூ.24.54 லட்சத்துக்கு
காய்கறிகள் விற்பனை
ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நேற்று வரத்தான, 65.51 டன் காய்கறிகள், 24.54 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விடுமுறை தினமான நேற்று வழக்கம்போல் காய்கறிகள் வரத்து அதிகரித்தது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 26.11 டன் காய்கறிகள், பழங்கள் ஒன்பது லட்சத்து, 87 ஆயிரத்து, 804 ரூபாய்க்கு விற்பனையானது., மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் வரத்தான, 65.51 டன் காய்கறிகள், 24 லட்சத்து, 54 ஆயிரத்து, 144 ரூபாய்க்கு விற்பனையானது.
வழிப்பறியில் ஈடுபட்டஇரு வாலிபர்கள் கைது
ஈரோடு: ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 50, தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புதுக்காலனி அருகே வந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இரு வாலிபர்கள், முருகேசனை மிரட்டி அவரிடம் இருந்த மொபைல்போன், 1,200 ரூபாயை பறித்து சென்றனர்.
வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி மொபைல்போன், பணம் பறித்த தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த அரவிந்த், 27. பெரியசேமூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த குமார், 23, ஆகியோரை கைது செய்தனர்.
தொடர் மழையால்வெறிச்சோடிய சாலை
தாராபுரம்: தாராபுரத்தில், நேற்று மாலை பெய்த தொடர் மழையால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் நேற்று மாலை, 6:00 மணியளவில் லேசாக துவங்கிய மழை, நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்தது. இரவு 8:00 மணி வரை தொடர்ந்த மழையால், சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்கோடி காணப்பட்டது. மேலும் உப்புத்துறைப்பாளையம், கொண்டரசம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நடந்து சென்றவர்
வாகனம் மோதி பலி
பவானி, மே 20-
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வேதாந்தபுரத்தை சேர்ந்த சரவணன், 40, சோப்பு வியாபாரி. நேற்று காலை லட்சுமிநகர் காவிரியாற்று பாலத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கணவர் மாயம்; மனைவி புகார்பவானி: அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் சுப்ரமணி, 65; இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை.
நான்கு நாட்களுக்கு பிறகு, ஒடிசா மாநிலம், கட்டாக் என்ற இடத்தில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார். வீட்டுக்கு திரும்பி வந்து விடுவார் என்ற உறவினர்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது வரை வீடு திரும்பவில்லை.
இதை தொடர்ந்து, காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு, அவரது மனைவி லட்சுமி, அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

