ADDED : பிப் 29, 2024 04:07 AM
பில்டர்ஸ் அசோசியேசன்,
ஒப்பந்ததாரர்கள் ஸ்டிரைக்
ஈரோடு: கட்டுமான பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஜல்லி, எம்.சண்ட்- பி.சாண்ட் விலை, கடந்த மூன்று மாதங்களில், 80 முதல், 90 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணியை கடும் நஷ்டத்தில் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, பில்டர்ஸ் அசோசியேசன், கட்டுமான பணி ஒப்பந்ததாரர்கள், கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன்படி நேற்று கட்டுமான பணிகளில் வேலை செய்யாமல் புறக்கணித்தனர். 500க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர், பொறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால், 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இன்றும் வேலை நிறுத்தம் நடக்கிறது.
81 பயனாளிகளுக்கு
இலவச தையல் மெஷின்
ஈரோடு: சமூக நலத்துறை, சிறுபான்மை நலத்துறை சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.
மேயர் நாகரத்தினம், எம்.பி., கணேசமூர்த்தி முன்னிலை வகித்தனர். இதில், 26 பயனாளிகளுக்கு, 1.46 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச தையல் இயந்திரம், 55 பயனாளிகளுக்கு, 3.20 லட்சம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். துணை மேயர் செல்வராஜ், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உட்பட பலர்
பங்கேற்றனர்.
இடைநிலை ஆசிரியர்
211 பேர் கைது
ஈரோடு: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து, கடந்த இரு நாட்களாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட, மகளிரணி செயலாளர் பங்கஜம் தலைமையில் ஆசிரியர்கள் சென்றனர்.
இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி தராத நிலையில், தடை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, 144 பெண்கள் உள்ளிட்ட, 211 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலையில்
விசைத்தறிகளுக்கு 'லீவு'
சென்னிமலை: -மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள, வருமான வரி சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி, ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதில் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கமும் பங்கேற்றது. இதனால் சென்னிமலையில் நேற்று ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கடையடைப்பில் ஈடுபட்டன. மேலப்பாளையம், பொறையன்காடு பகுதிகளில் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், சென்னிமலை டவுன் மற்ற பகுதி, கிராமப்புறங்களில் விசைத்தறிகள் இயங்கின.
மத்திய அரசை கண்டித்து
காங்., ஆர்ப்பாட்டம்
ஈரோடு: கச்சத்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனர்களை மீட்க தவறிய, மத்திய அரசை கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மண்டல தலைவர்கள் தினேஷ், விஜயபாஸ்கர், முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், ரவி பேசினர். நிர்வாகிகள் செந்தில்ராஜா, மாதேஷ், பாஸ்கர்ராஜ், வின்சென்ட், விஜய்கண்ணா, பிரபு, தீபா உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறுமியிடம் அத்துமீறிய
வாலிபர் கோபியில் கைது
கோபி: கோவை அருகே சிறுமுகையை சேர்ந்தவர் அருண்குமார், 26; கோபி அருகே பொலவக்காலிபாளையத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, 15 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, அருண்குமாரை போக்சோ வழக்கில், கோபி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

