ADDED : செப் 18, 2026 06:46 AM

ஈரோடு:சதுர்த்தி
விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகரில், இந்து முன்னணி, பொது நல
அமைப்புகள் சார்பில், 14ம் தேதி, 180க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்
பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினந்தோறும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
இந்நிலையில் இந்த சிலைகளை கரைக்கும் பணி நேற்று நடந்தது.
முன்னதாக, 180க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும்
அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளங்கள் முழங்க, ஈரோடு
சம்பத்நகருக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இந்து
முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
மாநில துணை தலைவர்
சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.எஸ்., மாநில செயற்குழு உறுப்பினர்
விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநில துணை தலைவர் நந்தகோபால்
ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் விநாயகர் மற்றும் சிவன்,
பார்வதி வேடமிட்டும், பெண்கள் முளைப்பாரியை சுமந்தும், இந்து முன்னணி
கொடிகளை கைகளில் ஏந்தியும் சென்றனர்.
ஊர்வலம் துவங்கியதும் மழை
லேசாக பெய்ய துவங்கியது. பின்னர், 45 நிமிடங்கள் மழை தொடர்ந்தது.
ஆனாலும் கொட்டும் மழையில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்தது.
பெரியவலசு
நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை,
காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி சாலை,
காவிரி சாலை, கருங்கல்பாளையம் வழியாக காவிரி ஆற்றின் பழைய பாலத்தை
அடைந்தது.
அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்று ஹிந்து
அமைப்புகள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும்
சேர்த்து, 229 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீசார்
தெரிவித்தனர். ஈரோடு எஸ்.பி.கிரண் ஸ்ருதி தலைமையில் பாதுகாப்பு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலத்தை சாலையின் இருபுறமும்
திரண்டு மக்கள் கண்டுகளித்தனர். ஊர்வலத்தால் மாநகரில் உள்ள
பல்வேறு நிறுவனங்களும் மதியத்துக்கு மேல் தொழிலாளர்களுக்கு
விடுமுறை விடப்பட்டது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
