/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எச்சரிக்கையை மீறி கொட்டப்படும் குப்பை
/
எச்சரிக்கையை மீறி கொட்டப்படும் குப்பை
ADDED : செப் 06, 2025 01:58 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையத்தில் ஏராளமான குடியிருப்புகள், அரசு, தனியார் பள்ளி உள்ளது. அதேபோல் பர்னிச்சர் கடைகள், பழைய பொருட்கள் விற்பனையகம் என பல்வேறு வணிக கடைகளும் செயல்படுகின்றன.
சில தினங்களுக்கு முன் பெரியவலசுக்கு செல்லும் வழியில், வீட்டு உபயோக கழிவுப் பொருளை சாலையோரமாக கொட்டுவதால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக நமது நாளிதழில் செய்தி வந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் குப்பை அகற்றப்பட்டு, மாநகராட்சி ஆணையரின் எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்பட்டது.
இதை மீறி மீண்டும் தலையணை, பஞ்சு, பிளாஸ்டிக் கவர் என குப்பை கழிவுகளை மூட்டை கட்டி வீசியுள்ளனர். குப்பையை அகற்றாவிட்டால் மாநகராட்சியை குற்றம் சாட்டும் மக்கள், அதே நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறுவது எவ்விதத்தில் நியாயம். சுகாதாரம் காப்பதில் மாநகராட்சிக்கு மட்டும்தான் பங்குள்ளதா? மக்களுக்கு இல்லையா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.