ADDED : மே 07, 2025 01:28 AM
ஈரோடு:ஈரோட்டில், காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு அடுத்த, வெள்ளோடு பூங்கம்பாடி பாறை வலசு பகுதியை சேர்ந்தவர் பாலகுமரன், 38. இவர் நேற்று முன்தினம், ஈரோடு பெரியார் நகர் பகுதியில் ஹோண்டா சிட்டி காரை நிறுத்தி விட்டு, கதவை பூட்டாமல் சென்றுள்ளார். காரின் டேஸ் போர்டில், ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை வைத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர், கார் கதவை திறந்து, 60 ஆயிரம் ரொக்கத்தை திருடி ஓடினார்.
இதை பார்த்த பாலகுமரன் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் அந்த நபரை விரட்டினர். பொதுமக்கள் விரட்டுவதை பார்த்து, அங்குள்ள சுவரின் மீது ஏறி, கீழே விழுந்தார். இதில், அவருக்கு கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் பிடித்து, அவரிடம் இருந்த பணத்தை மீட்டனர்.
ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், சூரம்பட்டி ஸ்டாலின் வீதியை சேர்ந்த சூர்யா மகன் சீனிவாசன், 26, என தெரியவந்தது. அவருக்கு காயங்கள் இருந்ததால், போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
