காலிங்கராயன் வாய்க்கால் தொட்டிப்பாலம் விவகாரம்; அமைச்சர் முத்துசாமி அறிக்கை
காலிங்கராயன் வாய்க்கால் தொட்டிப்பாலம் விவகாரம்; அமைச்சர் முத்துசாமி அறிக்கை
ADDED : மார் 16, 2026 07:44 AM
ஈரோடு: காலிங்கராயன் வாய்க் கால் தொட்டிப்பாலம் விவகாரத்தில், விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த இருப்பதாக, அமைச்சர் முத்துசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காலிங்கராயன் வாய்க்காலில் 12/3வது மைல் முதல் 15/4.5வது மைல் வரை, 83.3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க, தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 13/7வது மைலில் தொட்டிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது, 750 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டதாகும். இது மிகப்பெரும் கருங்கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மிக அதிநுட்பமான ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பது, மிகப்பெரிய சிறப்புக்குரியது மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டியதுமாகும்.
இது சம்பந்தமாக கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் காலிங்கராயன் மீது பற்று கொண்ட அமைப்புகளுடன் கடந்த, 11ல் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தொட்டிப்பாலத்தை பாதுகாக்க கருத்து தெரிவித்தனர். பலர் தொட்டிபாலத்திலேயே நீர் கொண்டுபோனால் எதிர்காலத்தில் உடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும். அப்பொழுது விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்று அச்சத்தை தெரிவித்தனர்.
தொட்டிபாலத்தை அப்படியே எடுத்து, மக்கள் அடிக்கடி வந்து செல்கிற காலிங்கராயன் அணைக்கு அருகில் வைக்கவும் கருத்து தெரிவித்தனர். நீர்வளத்துறை ஆய்வு செய்த பொழுது தொட்டிபாலத்தை அப்படியே பயன்படுத்துவதில் சில சிக்கல் இருக்கிறது. மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தினர். அதன்பின் கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., ஆகியோருடன் நானும் தொட்டி பாலத்தை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் தொட்டிபாலத்தை ஒட்டியே ஒரு புதிய பாலம் அமைக்கலாம். தொட்டி பாலத்தை சீரமைக்கலாம்.
தண்ணீர் விடும்பொழுது 75 சதம், புது பாலத்திலும், 25 சதம் தொட்டி பாலம் வழியாகவும் செல்லும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கலாம் என்ற கருத்தை எங்கள் சார்பாக கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் அதை ஆய்வு செய்து அது குறித்து அறிக்கை கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். புது பாலம் அமைக்க தொட்டிப்பாலத்திற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான நிலம் சிறிய அளவில் தேவைப்படுகிறது. அந்த நில உரிமையாளரை நாங்கள் சந்தித்து, நிலத்தை கொடுக்க வேண்டுகோள் வைத்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
