தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : பிப் 06, 2024 10:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2024 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குற்ற தடுப்பு நடவடிக்கை

6 போலீசாருக்கு பாராட்டு

குற்றங்களை தடுக்க, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, காவல்துறையில் கடந்த செப்., மாதம் முதல் புது நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி கடந்த டிச., மற்றும் ஜனவரி என இரு மாதங்களில், வரப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செந்தில் வடிவேல், ஏட்டு துரைசாமி ஆகியோர், வாகன தணிக்கையில் உண்டியல்

திருடர்களை பிடித்தனர்.

இதேபோல் ஆசனுார் செக்போஸ்டில் பணியாற்றி வரும் ஏட்டுகள் மகேந்திரன், பிரபு, சசிகுமார், பகவதிராம் ஆகியோர், சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட கர்நாடகா மாநில மதுபாட்டில், புகையிலை பொருட்களை அதிக அளவில் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆறு பேரையும், கோவை டி.ஐ.ஜி., சரவண சுந்தர், தனது அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்தார். சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அரசு பள்ளி மாணவன்

கராத்தேவில் அசத்தல்

தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, தனியார் கராத்தே அமைப்பு சார்பில், சேலத்தில் நடந்தது. இதில் எட்டு வயது பிரிவில், ஈரோடு எஸ்.கே.சி., ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் இளையபாரதி, குமிட்டோ பிரிவில் இரண்டாமிடம், கட்டா பிரிவில் மூன்றாமிடமும் பிடித்தார். தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள் மாணவனை பாராட்டினர்.

வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும், 9ம் தேதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. வேலை அளிப்போர், வேலை பெற வருவோர், www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விபரத்துக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 96754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.1.64 லட்சத்துக்கு

தேங்காய் விற்பனை

ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 18,592 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 25.63 ரூபாய் முதல், 28.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 6,208 கிலோ தேங்காய், ஒரு லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

குறைதீர் கூட்டத்தில்

415 மனுக்கள் ஏற்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 415 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் பலர், உபகரணங்கள் கோரி மனு வழங்கினர். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

மத்திய பாதுகாப்பு

படை வீரர் மாயம்

கோபி அருகே கரட்டூரை சேர்ந்தவர் மணிவேல், 40; ஜம்மு காஷ்மீரில் உள்ள, மத்திய பாதுகாப்பு காவல் படையில் பணிபுரிந்தார். கடந்த மாதம், 10ல் விடுமுறையில் கோபிக்கு வந்தார். விடுமுறை முடிந்து, 22ம் தேதி பணிக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் உறவினர் ஒருவர், காஷ்மீரில் உள்ள முகாம் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, மணிவேல் வராதது தெரிந்தது. அவரது குடும்பத்தார், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் மணிவேல் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவரின் புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஆட்டோ ஸ்டாண்ட்

வலியுறுத்தி முறையீடு

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் விவேக்குமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: சோலாரில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. சோலார், லக்காபுரம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி வருகிறோம். புதிதாக அமையும் பஸ் ஸ்டாண்டில், எங்களது ஆட்டோக்களையும் இயக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகள் சங்க கூட்டம்

ஈரோடு மாவட்ட காலி பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. அரசு டாஸ்மாக் பார் சில்லறை விற்பனை காலி பாட்டில் டெண்டர் சம்மந்தமாக கருத்து கேட்டு, சங்கம் எடுக்கும் முடிவுக்கு நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றினர். பல்வேறு பகுதி காலி பாட்டில் சேகரிப்போர் பங்கேற்றனர்.

100 நாள் வேலை கூலி

தாமதம் என வருத்தம்

பவானி தாலுகா வைரமங்கலம், குட்டிபாளையம் பகுதியில், 300க்கும் மேற்பட்டோர், நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்கின்றனர். பல மாதங்களாக கூலி வழங்கவில்லை. பஞ்., நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் பலனில்லை. இதனால் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலுவை கூலியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி, கிராமத்தை சேர்ந்தவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர்.

விபத்தில் சிக்கிய மொபட்

ஓட்டிச் சென்றவர் சாவு

அந்தியூர் அருகே சென்னம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி மயில்சாமி, 43; ஹோண்டா டியூ மொபட்டில், கோபி சாலையில் நேற்று காலை சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற தேவி, 56, என்ற பெண் மீது மொபட் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேவி, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் மயில்சாமியும் பலத்த காயத்துடன், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தார். தேவி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிப்காட் தொழிலாளர்கள்

எம்.எல்.ஏ.,விடம் மனு

சிப்காட் தொழிலாளர்கள், 600-க்கும் மேற்பட்டோர், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமாரிடம், பணி பாதுகாப்பு கோரி, நேற்று மனு கொடுத்தனர்.

மனு விபரம்: சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையத்தை மூடக்கோரி, சிப்காட் பாதுகாப்பு போராட்ட குழு கோரிக்கை முன் வைத்துள்ளது. அது ஏற்கப்பட்டால் ஒன்பது சாய ஆலைகள் பாதிக்கப்படும். இதனால் அவற்றில் பணிபுரியும், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வேலை இழக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலெக்டரிடம் பேசி, ஆவண செய்வதாக, அவர்களிடம்

எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

போலி வழக்குப்பதிவை

கண்டித்து ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் அடுத்த கரிதொட்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி மீது, போலியாக பி.சி.ஆர்., வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வழக்கை ரத்து செய்ய கோரி, பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் கூட்டமைப்பினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு கழக தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில், சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பெண்கள் உட்பட, 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழித்தடத்தை அடைத்து

விட்டதாக குற்றச்சாட்டு

அந்தியூர், தவிட்டுப்பாளையம், விவேகானந்தர் வீதியை சேர்ந்த தீபா மற்றும் சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

எனது தந்தை மொழிப்போர் தியாகி. அதற்கான கவுரவத்தை, அரசு சார்பில் எனது தாயாருக்கு வழங்கி வருகிறது. நாங்கள் எங்கள் வீட்டுக்கு செல்வதற்காக பரம்பரையாக பயன்படுத்தி வந்த வழித்தடத்தை, அப்பகுதியை சேர்ந்த சிலர் கம்பி வேலி போட்டு அடைத்து விட்டனர். இதுகுறித்து கடந்த டிச., 20ல் மனு அளித்தேன். நடவடிக்கை மேற்கொள்வதாக கூறிய டவுன் பஞ்., நிர்வாகம், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்கள் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கம்பி வேலியை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

ரூ.22.94 லட்சம் மோசடியில்

நெல்லுார் கில்லாடிக்கு காப்பு

வேலை வாங்கி தருவதாக, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திர வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து, 22.94 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, ஈரோடு சைபர் கிரைம் போலீசில் பலர் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில் ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த மண்டா சிவக்குமார், 39, என்பவரை கைது செய்தனர்.

அவரது வங்கி கணக்கின் மீது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், 164 சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை நடந்ததுள்ளது.

கல்லுாரி மாணவன்

தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கிருத்திகேஷ், 21; விடுதியில் தங்கி, கோபி கலை அறிவியல் கல்லுாரியில், மூன்றாமாண்டு படித்தார். நேற்று கல்லுாரிக்கு செல்லாத நிலையில்ல், விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோபி போலீசார் உடலை மீட்,டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காலி செய்ய நகராட்சி கெடு

கடைக்காரர்கள் கொதிப்பு

தாராபுரம் பஸ் ஸ்டாண்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் வடபுறத்தில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பு வழங்கப்பட்டது. அதில், கடைகள் கட்டி, 40 ஆண்டுகளுக்கும் மேலானதால், புனரமைப்பு செய்யப்பட்டவுள்ளது.

இதனால் கடைகளை இடிக்க வேண்டும். இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி செயல்படாததால், இந்த அறிவிப்பை தொடர்ந்து, 24 மணி நேரத்துக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், நேற்று கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். நகராட்சி அலுவலகத்திலும் முறையிட்டு, கால அவகாசம் கேட்டனர்.

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சோமசுந்தரம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் ஈரோடு தாலுகா இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். காங்கேயத்தில் பணிபுரிந்த காமராஜ், ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். நேற்று பொறுப்பேற்ற சோமசுந்தரத்துக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

நத்தக்காடையூர் ஊராட்சி

சைக்கிள் ஸ்டேண்ட் ஏலம்

நத்தக்காடையூர் ஊராட்சி சைக்கிள் ஸ்டேண்டுக்கு, 8ம் தேதி ஏலம் நடக்கிறது.

காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் நத்தக்காடையூரில், வாரச்சந்தை அருகில் சைக்கிள் ஸ்டேண்ட் செயல்படுகிறது. ஊராட்சிக்கு சொந்தமான இந்த ஸ்டேண்டுக்கு, 2024-25ம் ஆண்டுக்கு வசூல் செய்யும் உரிமத்துக்கான பொது ஏலம் வரும், 8ம் தேதி நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு காங்கேயம் ஊராட்சி ஒன்றிய வளகத்தில் ஏலம் நடக்கும்.

ஏலம் எடுப்பவர்கள் சொந்த செலவில் தீப்பிடிக்காத கொட்டகை அமைக்க வேண்டும் 1.4.2024 முதல் 31.3.2025 வரை ஓராண்டுக்கு மட்டும் ஏலம் விடப்படும். ஏலத்தில் பங்கேற்போர், 5,௦௦௦ ரூபாய் முன்வைப்பு தொகையை, 8ம் தேதி காலை, 11:௦௦ மணிக்குள் காங்கயம் ஒன்றிய கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் போதையில்

மீன் பிடிக்க முயன்றவர் பலி

ஈரோடு மாவட்டம் லக்காபுரம், பரிசல் துறை நால்ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 33; வெல்டிங் லேத் பட்டறை நடத்தினார். இவரின் மனைவி பவித்ரா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நண்பர்களான ரமேஷ், சசி குமாருடன், சின்னியம்பாளையம் பிரிவு அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்க, மணிகண்டன் கடந்த, 4ம் தேதி மாலை சென்றார். மது போதையில் இருந்ததால், கரையில் அமர வைத்துவிட்டு, மற்ற இருவரும் ஆற்றுக்குள் சென்றனர். சிறிது நேரம் கழித்து கரைக்கு வந்தபோது மணிகண்டன் இல்லை.

வீட்டுக்கு சென்றிருக்கலாம் என நினைத்து, வீட்டில் விசாரித்த போது வராதது தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்து மனைவி பவித்ரா, உறவினர்கள், நண்பர்கள் கரையோரத்தில் தேடியபோது, ஓரிடத்தில் மணிகண்டன் மொபைல்போன், லுங்கி கிடந்தது. இதனால் மொடக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடுதலில், ஆழமான பகுதியில் மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார். புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

1839ல் கட்டப்பட்ட முருகன் கோவில்

கல்வெட்டில் அறியப்பட்ட தகவல்

ஈரோடு, பிப். 6-

கனகபுரம் மலைப்பாறை முருகன் கோவில், 1839ல் கட்டப்பட்டதற்கான ஆதாரம் கல்வெட்டில் கண்டறியப்பட்டதாக, யாக்கை மரபு அறக்கட்டளை குழு கல்வெட்டு ஆய்வாளர் குமரவேல் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: மொடக்குறிச்சி தாலுகா கனகபுரம் மலைப்பாறை முருகன் கோவிலின் அர்த்த மண்டபத்தில் கல்வெட்டுகள் உள்ளதாக தகவல் கிடைத்தது. யாக்கை மரபு அறக்கட்டளை குழுவினர் படியெடுத்தனர். கல்வெட்டியல் துறை மூத்த ஆய்வாளர் ராஜகோபால் சுப்பையா, கல்வெட்டை படித்து உறுதி செய்தார்.

கல்வெட்டில், 19ம் நுாற்றாண்டின் துவக்க கால எழுத்தமைவு உள்ளதாகவும், முருகன் கோவில் கற்களை கொண்டு கற்றளியாக மாற்றியமைக்கப்பட்ட தகவல் கிடைக்கிறது. கல்வெட்டில் சகரை ஆண்டு, கலியுக ஆண்டு குறிப்பு வருகிறது. இவ்விரு ஆண்டுகளும், 1839ல் கோவில் கட்டப்பட்டதை உறுதி செய்கிறது. இதேபோல் காளிங்கராயன் கால்வாயை வெட்டிய, காளிங்கராயன் பிறந்த ஊர் குறித்த குறிப்பும், இக்கல்வெட்டில் உள்ளது.

தற்போது கருவறை, பின்புற சுவர்களில் கற்கள் சரிந்து, சிதிலமடைந்த நிலையில் கோவில் காணப்படுகிறது. உள்ளூர் மக்கள், அரசு நிர்வாகம் கவனம் செலுத்தி, கோவிலை பாதுகாப்பது, வரும் தலைமுறைக்கு செய்யும் தொண்டாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us