தடை செய்யப்பட்ட சல்பாஸ் மாத்திரை: உரக்கடைகளில் தாராளமாக விற்பனை
தடை செய்யப்பட்ட சல்பாஸ் மாத்திரை: உரக்கடைகளில் தாராளமாக விற்பனை
ADDED : பிப் 28, 2016 08:44 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், சில உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட பூச்சி மாத்திரை, விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த பழக்கடை வியாபாரி சிவராஜ். சல்பாஸ் பூச்சி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாத்திரையை விற்க தடை உள்ளது. அவருக்கு மாத்திரை கிடைத்தது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் உரக்கடையில் அவர் வாங்கியது தெரிந்தது.
இதுகுறித்து விவசாயி விவேகானந்தன் கூறியதாவது: மஞ்சள் கிழங்குகளை துளை போடும் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தவும், மஞ்சள் குடோன்களிலும் சல்பாஸ் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. இதில்லாமல் தென்னையில் மரத்தை குடையும் வண்டுகளுக்கும், எலி பொந்துகளிலும் இதை விவசாயிகள் போடுவர். இதை விற்க தடையுள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு விவசாயத்துக்கு சம்பந்தம் இல்லாத மக்களுக்கும் விற்கப்படுகிறது. உரக்கடைகளில் ஆய்வு செய்யும் வேளாண் அதிகாரிகள், இதை கண்டு கொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வேளாண்மை உர கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் கூறியதாவது: சல்பாஸ் மாத்திரையை, மக்களுக்கு விற்க தடை உள்ளது. சிவில் சப்ளை குடோன், தென்னந்தோப்பு வைத்துள்ளவர்களுக்கு, ஆதாரத்துடன் கேட்டால் மட்டுமே விற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர், எந்த கடையில் வாங்கினார் என்பது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
