ADDED : பிப் 19, 2024 11:03 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறி எதுவுமில்லை என்று, பொது சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
கோழிகள், காட்டு பறவைகள் மற்றும் அதன் கழிவுகளில் இருந்து பறவை காய்ச்சல் எளிதில் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர், ராணிபேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பொது சுகாதார துறை அறிவுரை வழங்கியுள்ளது. காய்ச்சல், தலைவலி, கை-கால் தசை பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் பறவை காய்ச்சலின் அறிகுறியாகும்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறி குறித்து, பொது சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறிகளுடன் இதுவரை யாரும் சிகிச்சைக்கு வரவில்லை. கால்நடை பராமரிப்பு துறையினர் கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்துகின்றனர். இதில் கோழி உள்ளிட்ட கால்நடைகள் பெருமளவில் ஒரே பகுதியில் இறந்தது தொடர்பாக தெரிவிப்பர். அதுபோல் தற்சமயம் பெருமளவில் கோழி உள்ளிட்ட கால்நடைகள் இறப்பு குறித்து புகார் ஆகவில்லை. பறவை காய்ச்சல் மட்டுமின்றி அனைத்து வரை காய்ச்சல் குறித்தும் தினமும் அறிக்கை அனுப்பி வைக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் காய்ச்சலின் தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.

