வண்டல் மண் எடுக்க குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி; லாரிகளை நிறுத்தி போராட்டம்
வண்டல் மண் எடுக்க குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி; லாரிகளை நிறுத்தி போராட்டம்
ADDED : ஜூன் 03, 2026 03:34 AM

புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை, விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வருவாய் துறை மற்றும் நீர்வளத் துறையிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று வண்டல் மண் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் பவானிசாகர் நீர்வளத்துறை அலுவலகத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு தினசரி, 40 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறுவதால், வண்டல் மண் எடுப்பதில் சுணக்கம் ஏற்படும் எனவும், வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கூடாது எனவும் வலியுறுத்தினர். தொடர்ந்து நேற்று காலை விவசாயிகள், காராச்சிகொரை வன சோதனை சாவடியில், 50க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வன சோதனை சாவடியை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் போலீசார், வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் மாலை வரை காத்திருப்பு போராட்டம் நீடித்தது.விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகள் தரப்பில், 200 வாகனங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த நிலையில் தினசரி, 40 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதை ஏற்க மறுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.மீண்டும் மாலை, 5:00 மணிக்கு பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், பவானிசாகர் ரேஞ்சர் சங்கர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், 'விண்ணப்பித்த, 200 வாகனங்களில், 150 வாகனங்களுக்கு நீர்வளத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வண்டல் மண் எடுப்பதற்கு வனச் சோதனைச் சாவடி வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை எதுவும் இல்லாமல் இன்று முதல் மண் எடுத்துக் கொள்ளலாம்' என தெரிவித்த நிலையில் காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
