ADDED : மார் 02, 2024 03:31 AM
ஈரோடு: தமிழகத்தில் பிளஸ் ௨ பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 106 மையங்களில் தேர்வு துவங்கியது. இதில், 265 பள்ளிகளை சேர்ந்த, 21,520 மாணவ, மாணவியர்; தனித்தேர்வர்களாக, 1,238 பேர் என, 22,758 பேர் எழுதினர். இவர்களில், 146 பேர் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர். தேர்வு பணியில், 106 முதன்மை கண்காணிப்பாளர், 113 துறை அலுவலர்கள், 175 பறக்கும் படை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். மொழிப்பாடங்களான தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. 27 வழித்தட அலுவலர்கள், 1,320 அறை கண்காணிப்பாளர்கள், 4 தொடர்பு அலுவலர்கள் தேர்வு பணிகளை கண்காணித்தனர். தேர்வு மையங்களில் மாணவர்களை தவிர பிறர் அனுமதிக்கப்படவில்லை.
காலை, 9:15 மணிக்கு தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். செருப்பு, பெல்ட், பள்ளி அடையாள அட்டை, ஸ்மார்ட் மற்றும் டிஜிட்டல் வாட்ச், தண்ணீர் பாட்டில் அனுமதிக்கவில்லை. குடிநீர், மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. 10:00 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 15 நிமிடங்கள் படித்த பின், விடைத்தாள் வழங்கப்பட்டு தேர்வு தொடங்கியது. மதியம், 1:15 மணிக்கு நிறைவடைந்தது.
சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் திம்மராயன்
உடனிருந்தனர்.
