ADDED : மே 22, 2026 05:42 AM
புன்செய்புளியம்பட்டி::புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 40-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி, ஸ்டேண்டாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது. ஆட்டோக்களை அகற்றிக்கொள்ள நகராட்சி பலமுறை நோட்டீஸ் அளித்தும், இதுவரை ஆட்டோக்கள் அகற்றப்படவில்லை. இந்த ஆட்டோக்களை அகற்றி தரக்கோரி, நகராட்சி நிர்வாகம் சார்பில், கமிஷனர் கருணாம்பாள் புளியம்பட்டி போலீசில் கடந்த மாதம் மனு அளித்திருந்தார். புதிய அரசு அமைந்த பின், நடவடிக்கை மேற்கொள்வதாக, போலீசார் தெரிவித்த நிலையில், இதுவரை நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் கூறியதாவது: எந்த அனுமதியும் தரப்படாத நிலையில் விதிமீறி பல ஆண்டுகளாக ஆட்டோ ஸ்டேண்ட் செயல்படுகிறது. மேலும் டிரைவர்கள் இரு சங்கமாக செயல்படுவதால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீசாரிடம் கடிதம் வழங்கி டி.எஸ்.பி.,யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
