ADDED : ஏப் 17, 2026 05:47 AM
ஈரோடு : ஈரோடு சூரம்பட்டி வலசு மோகன் குமாரமங்கலம் வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 44; ஈரோடு சின்னமுத்து இரண்டாவது வீதியில் பைனான்ஸ் நடத்தினார். கடந்த மாதம், 22ம் தேதி அலுவலகம் முன் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திண்டுக்கல், நாகர் நகர், வேடபட்டி அன்பரசு, 32; தாராபுரம், மூலனுார் வேலம்பூண்டி கிராமம் ஜெகதீஷ்குமார், 43; திருநெல்வேலி நாங்குனேரி பகுதி முத்துமாணிக்கம், 26, உள்ளிட்ட ஐந்து பேரை, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், கைது செய்தனர்.
இதில் அன்பரசு மீது விருதாசலம் போலீசில் ஆயுத வழக்கு நிலுவையில் உள்ளது. ஜெகதீஷ் குமார் மீது பல்வேறு ஸ்டேஷன்களில் ஒன்பது வழக்குகள், முத்து மாணிக்கம் மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் முத்து மாணிக்கம் கூலிப்படையை சேர்ந்தவர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை நீடுரை சேர்ந்த விஜயன், 47, கூலிப்படையாக செயல்பட்டதும், கடலூர் சிறையில் மற்றொரு வழக்கில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. நீதிமன்ற அனுமதி பெற்று இரண்டு நாள் கஸ்டடி விசாரணைக்காக ஈரோடுக்கு, விஜயனை, 15ல் போலீசார் அழைத்து வந்தனர். இன்று மாலை விசாரணை முடிந்து, கடலுார் சிறையில் மீண்டும் விஜயன் அடைக்கப்படுவார். இவர் மீது தமிழகம் முழுவதும், 13க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
